பணம், ஆவணங்கள் பறிமுதல்? சினிமா பைனான்சியர் மதுரை அன்பு வீட்டில் ஐடி ரெய்டு நிறைவு -சகோதரருக்கு குறி
மதுரை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்று இருக்கும் நிலையில் அவரது சகோதருடைய வீட்டில் மட்டும் ரெய்டு தொடர்ந்து நடைபெறுகிறது.
மதுரை அன்பு என்று அழைக்கப்படும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவிலான சினிமாக்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் அன்புச்செழியனிடமே கடன் பெற்று திரைப்படங்களை தயாரித்து வருகின்றன.
இந்த நிலையில்தான் 3வது நாளாக அன்புவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற. கடந்த 2 ஆம் தேதி அதிகாலை 5:30 மணி முதல் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள திரையரங்கம், மதுரையில் உள்ள திரையரங்கம் என பல இடங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தயாரிப்பாளர்கள்
இதேபோல், முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தயாரிப்பு நிறுவன தலைவர் தியாகராஜன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தலைவர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவன தலைவர் ஞானவேல் ராஜா, வி கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவன தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா உள்ளிட்டோரின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.

20 தயாரிப்பாளர்கள்
மேலும் மதுரை அன்புவிடம் நிதிபெற்ற திரைப்படங்களை தயாரித்த 20 முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாக இருக்கிறார்கள் என்றும் அதில் நடிகர் தனுஷும் அடக்கம் எனவும் செய்திகள் வெளியாகின. சோதனை நடத்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களே தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களாக திகழ்பவை.

ரெய்டு நிறைவு
இந்த நிலையில் 3 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை தற்போது நிறைவடைந்து உள்ளன. 3 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அன்புச்செழியனின் சகோதரர் வீட்டில் வருமான வரி சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

யார் இந்த மதுரை அன்பு?
சினிமாவுக்கு பைனான்ஸ் செய்வது மட்டுமின்றி கோபுரம் சினிமாஸ் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களையும் தயாரித்து வந்த இவர், சொந்தமாக திரையரங்கத்தையும் நடத்தி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலைக்கு மதுரை அன்புவே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடக்கது.












Click it and Unblock the Notifications