ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்!
மதுரை: ஜனநாயகன் ரிலீஸ் விவகாரத்தில் அடி வாங்கிக் கொண்டிருக்கும் படக்குழுவாவது என்ன பிரச்சனை என்பதை வெளியில் சொல்ல வேண்டும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் இதுவரை எந்தவொரு படமும் தடை செய்யப்பட்டதே இல்லை என்று கூறிய அமீர், ஜனநாயகன் பிரச்சனை தொடர்பாக படக்குழுவும் அமைதி காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்சார் பிரச்சனை காரணமாக விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவில்லை. இதன்பின் மறுதணிக்கை செய்ய அனுப்பப்பட்ட பின்னரும் இதுவரை ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கப்படவில்லை. இதனிடையே தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

இதனால் தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலும் தேவையாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கும், ஜனநாயகன் படம் ரிலீஸ் தொடர்பான கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு தான் முடிவு எடுக்க முடியும் என்று பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் இயக்குநர் அமீர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேர்தல் ஆணையம் உச்சபட்ச அதிகாரத்தை கொண்டுள்ளது. இதுவரை தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நேரத்தில் எந்த திரைப்படமும் நிறுத்தப்பட்டதே இல்லை. முதல்முறையாக தமிழ்நாட்டில் அப்படியொரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. விஜய் திரைப்படம் தடை செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கான காரணத்தை தணிக்கை வாரியமும் சொல்லவில்லை.. படக்குழுவும் சொல்லவில்லை.. விஸ்வரூபம் திரைப்படம் வரும் போது சிறுபான்மை மக்களின் மனதை பாதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக அந்தப் படத்தை பார்த்தவர்கள் கூறினார்கள். ஆனால் ஜனநாயகன் படத்தில் என்ன பிரச்சனை என்று யாரும் சொல்லவில்லை. அதுவொரு மறைமுக அஜண்டாவாகவே இருக்கிறது. ஜனநாயகன் ஒரு ரீமேக் படம்..
ஜனநாயகன் படத்தில் வரம்பு மீறிய காட்சிகளோ, வசனங்களோ இருக்கிறதா என்பதை இரு தரப்பும் சொல்லவில்லை. தணிக்கை வாரியமும் சொல்லவில்லை.. சென்சார் வாரியத்திற்கு கட் செய்ய வேண்டும் என்று சொல்லும் அதிகாரமே இல்லை. ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் நடவடிக்கை இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக அரசுக்கு ஆதரவான படங்கள் வந்து கொண்டிருக்கிறது.
விஜய் கூட்டணிக்கு சென்றிருந்தால், இந்த பிரச்சனை வந்திருக்குமா என்பது தெரியவில்லை. அதனை விஜய் தரப்பு தான் சொல்ல வேண்டும். படத்தில் என்ன இருக்கிறது என்பதை சொல்ல மறுப்பதே ஒரு பிரச்சனையாக உள்ளது. எப்போதும் அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடி வாங்குனவனாவது சொல்லனும்ல.. இதற்காக தான் அடிக்கிறார்கள் என்று.. நாம் யூகத்தில் பேச முடியாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications