ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டவர்.. உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.. ஜெயக்குமாரை சீண்டும் அய்யப்பன்!
மதுரை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை என்று ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதாவால் இருமுறை முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் ஓபிஎஸ். ஆனால் ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டவர் ஜெயக்குமார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தென் மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக இருக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
அதற்கேற்ப ஆர்பி உதயகுமாரும் அரசியலில் தீவிரமாக செயல்பட, திடீரென உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் ஓபிஎஸ் அணிக்கு தாவினார். இதன் மூலம் ஆர்பி உதயகுமாருக்கு எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த செல்வாக்கு குறைந்ததாக பார்க்கப்பட்டது. இதனிடையே ஆர்பி உதயகுமார் மகளின் திருமணம் வேலைகள் காரணமாக அரசியலில் தலைகாட்டாமல் இருக்கிறார்.

உங்கள் தொகுதியில் முதல்வர்
இதனால் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் கூறுகையில், மக்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்திருந்தேன். அதை பரிசீலனை செய்த அதிகாரிகள் விரைவில் நிறைவேற்றுவதாக உத்திரவாதம் அளித்துள்ளனர். அவ்வாறு நிறைவேற்றினால் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் வரவேற்கும் திட்டமாக அமையும். நாங்களும் இத்திட்டத்தை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.

ஜெயக்குமார் யார் தெரியுமா?
தொடர்ந்து ஓபிஎஸ் பற்றிய ஜெயக்குமாரின் கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வராக அறிவிக்கப்பட்டவர் ஒபிஎஸ். அவர் இல்லாத போதும் ஒருமனதாக மூன்றாவது முறை முதல்வரானார். ஆனால், ஜெயக்குமார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டவர்.

காழ்ப்புணர்ச்சி
அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே இன்று அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பதையே மறந்து கைக்கூலிகளை சேர்த்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என கூறி வருகிறார். ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்ட ஜெயக்குமார், இன்று ஒபிஎஸை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது.

தகுதியில்லை
ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கார்ப்பரேட் கம்பெனி கூட்டம் என பேசியுள்ளார். அங்கு வந்தவர்கள் அனைவரும் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் தான். தற்போது மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டு கூட்டம் நடைபெற்றது. இதை பேச எந்த தகுதியும் இல்லை.

சிந்து அபிவிருத்தி கழகம்
ஜெயக்குமார் வேண்டுமானால் புகழேந்தி கூறியது போல சிந்து அபிவிருத்தி கழகம் என ஆரம்பித்து அவர் ஒரு இயக்கத்தை நடத்திக் கொள்ளட்டும். மீண்டும் ஒருமுறை அண்ணன் ஒபிஎஸ் குறித்து பேசினால் உசிலம்பட்டி மக்கள் தக்க பதில் நடவடிக்கை எடுப்போம் என ஆவேசமாக எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications