நீதிபதி சுவாமிநாதன் வீடியோ காலில் எங்களை அவமானப்படுத்திட்டாரு! ஹைகோர்ட்டில் தர்கா தரப்பு வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் எங்கள் தரப்பு கருத்தை கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதை முழுமையாக கேட்காமல் பாதியிலேயே வீடியோ கால் இணைப்பை துண்டித்து எங்களை அவமதித்துவிட்டார் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தர்கா தரப்பினர் தங்கள் வாதத்தில் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மதுரை ஹைகோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில், "100 வருடங்களாக உச்சிப்பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இது சரியான இடம் என்று அர்ச்சகர் உறுதி செய்துள்ளார். அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிறகு ஏன் இது போன்ற தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற இது போன்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்? கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்கும்.
கோயிலில் பாரம்பரியமான பழக்கவழக்கங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ஹைகோர்ட்டில் நேரடியாக மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற முடியாது. உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்வு பெறலாம். பூஜை புனஸ்காரத்தில் எப்படி கோயில் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிட முடியாதோ அது போல் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயிலை கட்டாயப்படுத்த முடியாது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல. சமணர் காலத்து தூண். சமண முனிவர்கள், இரவில் ஒன்று சேர்ந்து கலந்தாலோசிப்பதற்காக தூண் வைக்கப்பட்டு வெளிச்சத்திற்காக அங்கு விளக்கேற்றியிருந்தனர். இது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான தூண் அல்ல என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "சமணர்கள் பழமையானவர்கள். அவர்கள் விளக்கு ஏற்றத்தானே தூணை பயன்படுத்தியுள்ளார்கள். சில புத்தகத்தில் அது விளக்கேற்றும் தூண் என குறிப்பிடப்பட்டுள்ளதே என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்,"நிலா வெளிச்சத்தை தாண்டி சமணர்கள் தங்கும் இடத்தில் வைக்கப்பட்ட வெளிச்சத்திற்கான தூண்களே, மதுரையின் அனைத்து மலைகளிலும் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன" என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து தர்கா தரப்பில் வாதாடிய போது, "திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மத நல்லிணக்கம், அமைதி சட்டம்- ஒழுங்கு என எதுவுமே கவனிக்கப்படவில்லை.
எந்தவிதமான கருத்துகளையும் சட்ட விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. தனி நீதிபதி, தனது உத்தரவுகளில் கோயில் ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும். மலை மீதுள்ள நிலங்களை தர்கா ஆக்கிரமித்தது போல் உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.
பழக்கவழக்கங்களை மாற்றுவதற்கு இது போன்ற மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கு விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை. எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவே கருதுகிறோம். எங்கள் தரப்பு நியாயத்தை வீடியோ காலில் தனி நீதிபதி கேட்டு கொண்டிருந்தார்.
அவர் முழுமையாக கேட்காமல் எங்கள் வீடியோ கால் இணைப்பை துண்டித்து எங்களை அவமானப்படுத்திவிட்டார் என வாதிட்டனர்.












Click it and Unblock the Notifications