குன்றம் இருக்கும் இடம் குமரன்! அதற்காக தூண் இருக்குற இடத்துல எல்லாம் விளக்கேற்ற முடியுமா? அரசு வாதம்
மதுரை: குன்றம் இருக்கும் இடம் குமரன் என்பது சரி, அதற்காக தூண் இருக்கும் இடங்களில் எல்லாம் விளக்கேற்ற வேண்டும் என்றால் எப்படி? என இந்து அறநிலையத் துறை தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பாஜகவை சேர்ந்த ராமரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத் தூணில் விளக்கேற்ற உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி தீபத்திருவிழாவின் போது கோயில் நிர்வாகத்தினர் வழக்கமாக ஏற்றும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே இருக்கும் தீபத்தில் விளக்கேற்றினர்.
இதனால் திருப்பரங்குன்றத்தில் பாஜக, இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அங்கிருந்த போலீஸாரின் தடுப்புகளை உடைத்தெறிந்தனர். இந்த நிலையில் ராமரவிக்குமார், கோயில் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இது ஒரு புறமிருக்க, கோயில் நிர்வாகத்தில் தலையிடுவதை கண்டித்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகமும் மாவட்ட ஆட்சியரும் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தனர்.
அதன் மீது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் தரப்பில் வாதத்தை முன் வைத்த வழக்கறிஞர்கள் தெரிவித்ததாவது: தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயில் நிர்வாகத்திற்கே முழு உரிமை உள்ளது. கோயில் நிர்வாகத்திற்கு என சட்டவிதிகள் உள்ளன.
தனி நபர் உரிமையை நிறைவேற்ற முடியாது. திருப்பரங்குன்றத்தில் 100 ஆண்டுகளாக ஆகம விதிகளின்படி தீபம் ஏற்றப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் கோயிலை கட்டாயப்படுத்த முடியாது.
கோயிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கோரியுள்ளார். அதற்கான உரிமை அவருக்கு இல்லை. மலை மீது விளக்கேற்றுவது வேறு வீட்டில் விளக்கேற்றுவது வேறு, மனுதாரர் கார்த்திகை தீபத்தை வீட்டு தீபம் போல் நினைக்கிறார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சமண முனிவர்கள் இரவு நேரங்களில் ஆலோசனை செய்யும் போது அந்த பகுதியில் தூண் வைத்து வெளிச்சத்துக்காக விளக்கேற்றியுள்ளனர். கார்த்திகை தீபத்திற்காக அமைக்கப்பட்ட தூண் அது கிடையாது.
இது போன்று மதுரையில் 4 இடங்களில் சமண முனிவர்கள் அமைத்த தூண்கள் இருக்கின்றன. இது இந்துக்களுக்கு சொந்தமான தூண் கிடையாது. இந்த வழக்கை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசரமாக கையாண்டார்.
குன்றன் இருக்கும் இடம் குமரன் இருப்பார் என்பது சரி! ஆனால் அதற்காக தூண் இருக்கும் இடங்களில் எல்லாம் தீபம் ஏற்ற சொன்னால் எப்படி என கேள்விகளை எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications