என் கொள்கையுடன் மோதாதீர்கள்.. தோற்றுதான் போவீர்கள்.. கமல் வார்னிங்!
திருப்பரங்குன்றம்: என் கொள்கையுடன் மோதாதீர்கள். தோற்றுதான் போவீர்கள் என கமல்ஹாசன் விளக்கமளித்தார்.
அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் பரப்புரையில் மேற்கொண்ட போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறியிருந்தார். இது பெரும் எதிர்ப்பை கிளப்பயது.
இதையடுத்து இரு நாட்களாக பரப்புரையில் ஈடுபடாமல் கொடைக்கானலில் தங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்குள்பட்ட தோப்பூருக்கு வருகை தந்தார்.

சாக்கடை
அப்போது மநீம வேட்பாளரை அறிமுகப்படுத்திவிட்டு கமல்ஹாசன் கூறுகையில் எங்கு சென்றாலும் குடிநீர் பிரச்சினை தலைதூக்கி ஆடுகிறது. குடிக்கும் நீரில் சாக்கடை நீர் கலப்பது தேச துரோகம்.

நடவடிக்கை
நான் அரவக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுகிறார்கள். நான் சொன்னது சரித்திர உண்மை. நான் கூறியதை முழுவதும் போடாமல் ஒரே வரியை ஊடகங்களும் 200 முறை போட்டு காண்பித்தன. எனவே என் மீது எடுக்கும் நடவடிக்கையை உங்கள் மீது எடுத்துவிட போகிறார்கள்.

மதம்
எனக்கு பல இடங்களில் பெருமை கிடைக்கிறது. சில இடங்களில் அவமானப்படுத்துகிறார்கள். என் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இந்துதான். நான் எப்படி அந்த மதத்தை தவறாக பேச முடியும்.

தட்டி கேட்பேன்
நான் வன்முறை கூடாது என்று கூறினால் நான் கலகத்தை விளைவிக்கிறேன் என கூறுவது எனது உள்மனதை புண்படுத்துகிறது. தேர்தல் அரசியலில் சேர்ந்த பின், ஒரு இனம் மட்டும் போதுமா ? மக்கள் அனைவருக்குமே நீதி கிடைக்க வேண்டும். அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்பேன்.

பிரிவினைவாதி
என்னை தலைவனாக எப்போதும் நான் நினைத்தது இல்லை. மதச் செருக்கு, ஜாதி செருக்கும் எங்கும் நினைக்காது. உண்மையே வெல்லும். நாங்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். அதனால் தீவிரமாக பேசுவோம். ஆனால் பிரிவினைவாதியாக பேசமாட்டோம்.

அவமானம்
நான் கோட்சேவை பயங்கரவாதி என்றோ கொலைக்காரர் என்றோ சொல்லவில்லை. இதுபோன்ற விளையாட்டு என்னிடம் வேண்டாம். இது வேண்டுகோள் அல்ல அறிவுரைதான். என்னை அவமானப்படுத்த எனது கொள்கையை கையில் எடுக்காதீர்கள்.

வீழ்த்துவோம்
சரித்தர உண்மையை சொல்லும் போது ஏற்படும் காயம் ஆறாது. அதை ஆற்றத்தான் வந்திருக்கிறேன். உண்மை கொஞ்சம் கசக்கும். அந்த நோய்க்கு மருந்து ஆகும். இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். வீழ்த்துவோம் என்றார் கமல்ஹாசன்.

கவலை வேண்டாம்
அய்யோ வீழ்த்துவோம் என சொன்னவுடன், ஏதோ ரத்தம் வரும்படி வீழ்த்துவோம் என்ற அர்த்தத்தில் நான் கூறிவிட்டேன் என கோபப்படாதீர்கள். ஜனநாயக முறையில் வீழ்த்துவோம் என்றுதான் நான் கூறினேன். எனவே எந்த கறையும் படாத வகையில் வெள்ளையும் சொள்ளையுமாக வீட்டுக்கு போகலாம். கவலை வேண்டாம் என்றார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications