இந்துக்களின் ஒரே பாதுகாப்பு திமுக.. பிடிஆரை வைத்து கொண்டு சொல்கிறேன்.. மதுரையில் கனிமொழி சம்பவம்
மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிடிஆர், சுந்தர் சி இடையேயான போட்டியால் மதுரை மத்திய தொகுதி கவனம் ஈர்த்துள்ளது. மதுரையில் பிரச்சாரம் செய்த கனிமொழி, இந்துக்களின் பாதுகாவலர் திமுக தான். பிடிஆரை பார்த்தாலே தெரியவில்லையா என்று பேசியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சார்பில் இயக்குநர் சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளார். தவெக சார்பில் அவர்களின் கூட்டணியில் உள்ள முஸ்தபா விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். பிடிஆரை ஆதரித்து திமுக எம்பி கனிமொழி மதுரையில் பிரச்சாரம் செய்தார்.

கோயில்களை காப்பாற்றியுள்ளோம்
அப்போது கனிமொழி பேசுகையில், "நிறைய பேர் திமுக ஆட்சி இந்துக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள் என்று சொல்லுவார்கள். பிடிஆர் கையை பார்த்தாலே தெரியும். அவரின் நெற்றியை பார்த்தாலே தெரியும். நான் என் பக்கத்தில் முழு இந்துவை வைத்துக் கொண்டு உங்களிடம் ஓட்டு கேட்கிறேன். கடவுள் மீது, கோயில் மீது, மதத்தின் மீது நம்பிக்கை வைத்து கோயிலுக்கு செல்ல கூடிய ஒருவருக்காக தான் உங்களிடம் நான் வாக்கு கேட்கிறேன்.
திமுக ஆட்சியில் 4,000 கோயில்களுக்கு மேல் குடமுழுக்கு செய்துள்ளனர். நாங்கள் தான் இந்துக்களுக்கு காவல்காரர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் யாரும் இதை செய்ய போவதில்லை. கோயில்களுக்கு சொந்தமான 7,500 ஏக்கர் நிலத்தை திராவிட மாடல் ஆட்சி மீட்டுள்ளது. கோயிலை காப்பாற்றியுள்ள ஆட்சி திமுக ஆட்சி. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலர்களாக திமுக நிற்கிறது.
இந்துக்களின் பாதுகாவலன்
அதேபோல உண்மையிலேயே இந்துக்களுக்கு காவலர்களாக, பாதுகாவலர்களாக திமுக நிற்கும். பெரும்பான்மை மக்களாக உள்ள இந்துக்களுக்கு ஒரே பாதுகாப்பு திமுக தான். மற்றவர்கள் எல்லாம் நாங்கள் தான் பாதுகாவலர்கள் என்று சொல்வார்கள். மகளிர் உரிமை தொகையை எந்த மதம் அல்லது எந்த ஜாதி என்று பார்த்தா கொடுத்தார்கள். தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டம் எந்த மதம், ஜாதி பார்த்தா கொடுத்தார்கள்.
பெரும்பான்மை மாணவர்கள் அதிகம் பெற்றார்கள். பெரும்பான்மை இந்து பெண்கள் தான் மகளிர் உரிமை தொகையை அதிகம் வாங்கியுள்ளனர். அதேபோல இஸ்லாமிய மாணவர்களும், சகோதரர்களும் அந்த தொகையை பெற்றுள்ளனர். எல்லோரையும் சமமாக நடத்த கூடிய, எல்லோருக்கும் பாதுகாப்பு வழங்க கூடிய, தமிழர்களின் உரிமைகளை, மாநில உரிமைகளை பாதுகாக்க கூடியது திமுக மட்டும் தான்" என்றார்.












Click it and Unblock the Notifications