துபாயில் தவித்த மதுரை தம்பதி... தகவல் அனுப்பிய அமீரக திமுக... உதவிக்கரம் நீட்டிய கனிமொழி எம்.பி.
மதுரை: மதுரையை சேர்ந்த தம்பதி துபாயில் வேலை இழந்த நிலையில் ஊர் திரும்பமுடியாமல் தவித்த தகவலறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் கனிமொழி எம்.பி.
வந்தே பாரத் மிஷன் 2-ல் தமிழகத்திற்கு துபாயில் இருந்து நேரடி விமானம் இல்லாததால், அந்த தம்பதியை கொச்சின் வரவழைத்து அங்கிருந்து சொந்த நிதியில் வாகனம் ஏற்பாடு செய்து மதுரை அழைத்து வந்துள்ளார் கனிமொழி.
அமீரக திமுகவினர் அளித்த தகவலின் அடிப்படையில் அவர் இந்த நடவடிக்கை மேற்கொண்டார்.
அயர்லாந்து டூ தூத்துக்குடி... 8 மாத கர்ப்பிணி செவிலியரை ஊருக்கு மீட்டு வந்த கனிமொழி எம்.பி.
துபாயில் தவிப்பு
மதுரை கூடல் நகரை சேர்ந்த பிரதீப் குமார்-பிரேமலதா தம்பதி துபாயில் வசித்து வந்த நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் பிரதீப் குமார் தனது வேலையை இழந்துள்ளார். இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளான அவர், தனது 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் சொந்த ஊரான மதுரைக்கு திரும்புவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் வந்தே பாரத் பேஸ் 2-ல் துபாயில் இருந்து தமிழகத்தின் எந்த நகரத்திற்கும் விமான சேவை இல்லாததால் அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கனிமொழிக்கு தகவல்
இது குறித்த தகவலறிந்த அமீரக திமுகஅமைப்பாளர் மீரான்,கனிமொழி எம்.பி.யை தொடர்புகொண்டு விவரத்தை தெரிவித்ததுடன், அது தொடர்பான விவரத்தை கடிதமாக எழுதி மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். இதையடுத்து மதுரை தம்பதியை துபாயில் இருந்து மீட்பதற்கான பணிகளை கவனிக்கத் தொடங்கியுள்ளார் கனிமொழி. உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி விவரத்தை கூறியுள்ளார்.
கொச்சின் டூ மதுரை
அதன்படி துபாயில் இருந்து கொச்சினுக்கு வந்த மீட்பு விமானத்தில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு 8 மாத கர்ப்பிணியான பிரேமலதாவும் அவரது கணவர் பிரதீப்பும் வந்திறங்கினர். அங்கு சோதனையை முடித்துக்கொண்ட அவர்களுக்கு, மதுரைக்கு செல்வதற்கான வாகன ஏற்பாட்டையும் கனிமொழியே தனது சொந்த நிதியில் செய்துகொடுத்துள்ளார்.
நெகிழ்ச்சி
இதனிடையே அமீரக திமுக நிர்வாகி மீரானுக்கும், உதவிக்கரம் நீட்டிய கனிமொழி எம்.பி.க்கும் 8 மாத கர்ப்பிணியான பிரேமலதாவின் பெற்றோர் நெகிழ்ச்சி நிரம்ப நன்றி தெரிவித்துள்ளனர். தங்கள் மகளையும், மருமகனையும் பாதுகாப்பாக மீட்டு வந்தமைக்காக விரைவில் கனிமொழியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.