டெல்லி மாதிரி தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும்! அமித்ஷா உறுதி! திமுக மீது ஊழல் புகார் வாசிப்பு
மதுரை: ‛‛2025ல் டெல்லியில் எப்படி ஆட்சியை பிடித்தோமோ, 2026ல் தமிழகத்தில் பாஜக கட்சியின் ஆட்சி மலரப்போகிறது. எல்லாரும் கவனமாக கேளுங்கள். காதுகளை திறந்து வைத்து குறித்து வைத்து கொள்ளுங்கள். 2026ல் தமிழகம், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறோம்'' என்று மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரைத்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் 2 நாள் பயணமாக நேற்று இரவு மதுரை வந்தார். காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பிறகு மதுரை ஒத்தக்கடையில் பாஜக மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அமித்ஷா கூறியதாவது:
மக்களே இப்போது வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தல் பாஜகவின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உயிர்ப்பான அவசியமான களமாகும். 2024ம் ஆண்டு தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல். அப்போது தான் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். 2024ல் ஒடிசா மாநிலத்தில் முழு பலத்துடன் பாஜக ஆட்சி அமைந்தது. ஹரியானாவிலும் அதேபோல் மிகப்பெரிய வெற்றியை 3வது முறையாக பதிவு செய்தோம். மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதேபோல் 2025ம் ஆண்டில் மிகப்பெரிய சாதனை செய்யப்பட்டது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி நீக்கப்பட்டது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தது. 2025ல் டெல்லியில் எப்படி ஆட்சியை பிடித்தோமோ, 2026ல் தமிழகத்தில் பாஜக கட்சியின் ஆட்சி மலரப்போகிறது. எல்லோரும் கவனமாக கேளுங்கள். காதுகளை திறந்து வைத்து குறித்து வைத்து கொள்ளுங்கள். 2026ல் தமிழகம், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறோம்.
ஆட்சியில் இருக்கும் திமுக ஊழல் ஊழல் என்று ஊழலில் தான் திளைத்து வருகிறது. இந்த திமுக ஆட்சி மத்திய ஆட்சியில் இருந்து ஏழை மக்களுக்கு கொடுக்கும் பணத்தை கூட மடை மாற்றி மக்களுக்கான நன்மையை கிடைக்காமல் செய்து வருகிறது. திமுக ஆட்சியில் விலைவாசி ஏற்றத்தாலும், வாழ்வாதார பிரச்சனையாலும் மக்கள் பாதிக்கும் சூழலில் மத்திய அரசு திட்டம் கிடைக்காத நிலை உள்ளது. மக்களுக்கு செய்யும் நன்மையை விட ஊழல் மலிந்துள்ளது.
டாஸ்மாக்கில் 35,775 கோடிக்கு ஊழல் செய்து ஊழல் ஆட்சி நடந்து வருகிறது. இந்த தமிழக அரசு நூற்றுக்கு நூறு தோல்வியடைந்த அரசாக உள்ளது. திமுக அரசு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி பட்டியல் கொடுக்கிறார்கள். அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக கூறி வருகிறார்கள். அவர்களுக்கு தைரியம் இருந்தால் வாக்குறுதி பட்டியலை எடுத்து வந்து அதனை பார்த்து எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளீர்கள் என்று கூற வேண்டும்.
தமிழகத்தில் ஊழலால் மட்டுமில்லை.. கள்ளச்சாராயத்தினாலும் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். தென்தமிழகத்தில் ஜாதி பிரச்சனை, பிரிவினை வாதம் மூலம் அரசியல் லாபத்தை கருத்தில் கொண்டு திமுக செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை. வேலை என்பது இல்லை. இளைஞர்கள் துன்பத்தில் இருக்கும் நிலை தான் உள்ளது. தமிழ்நாட்டு முதல்வருக்கு இதுபற்றிய அக்கறை, கவலை இல்லை.
மோடியின் ஆட்சி அமைந்த பிறகு இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது. சாதனையின் உச்சமாக இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. 10 ஆண்டுகளில் மோடி அரசு 4.19 டிரில்லியன் வளர்ச்சியை நாட்டு கண்டுள்ளது. முந்தைய 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு 1 லட்சத்துக்கு 53 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் அதை விட அதிகமாக 6 லட்சத்துக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது சாலைக்கு 63 ஆயிரம் கோடி, கட்டுமானத்துக்கு 73 ஆயிரம் கோடி, ஏர்போர்ட்டுக்கு 3 ஆயிரம் கோடியும் தமிழகத்துக்கு நேரடியாக வழங்கி உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications