வேலையை காட்டிய செல்லூர் ராஜூ.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த மதுரை.. பாஜக 2வது இடம் வந்தது எப்படி?
மதுரை : மதுரை லோக்சபா தொகுதியில் பாஜகவின் இராம ஸ்ரீனிவாசன் 2,18, 705 வாக்குகள் பெற்று அதிமுகவை பின்னுக்கு தள்ளியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. அதில் பல்வேறு தொகுதிகளிலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதில் மதுரை லோக்சபா தொகுதியில் 4,28,204 வாக்குகள் பெற்று சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றியை பெற்றுள்ளார்.

அவருக்கு பின் 2வது இடத்தை 2,18,705 வாக்குகள் பெற்று பாஜகவின் இராம ஸ்ரீனிவாசன் பிடித்துள்ளார். இவருக்கு பின் 3வது இடத்தில் அதிமுக வேட்பாளர் சரவணன் 2,03,891 வாக்குகள் பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மதுரை லோக் சபா தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதியில் திமுகவுக்கு 4 எம்எல்ஏ-க்களும், அதிமுகவுக்கு 2 எம்எல்ஏ-க்களும் உள்ளனர்.
இதனால் திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் வென்றாலும், அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு இரண்டாவது இடம் கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக நிர்வாகிகள் இடையிலான மோதலால், லோக்சபா தேர்தலில் அக்கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. ஏற்கனவே மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ மூலமாக அதிமுகவுக்கு வராமல், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மூலமாக அதிமுகவில் இணைந்ததால் சரவணன் மற்றும் செல்லூர் ராஜூ இடையில் மோதல் போக்கு இருந்து வந்ததாக சொல்லப்பட்டது.
அதேபோல் மதுரையில் அதிமுக சார்பாக போட்டியிட யாரும் முன் வராததால் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின் செல்லூர் ராஜூ பெயரளவிற்கு சரவணனுக்காக பணியாற்றினாலும், தேர்தல் பணிகளில் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. இன்னும் சொல்லப் போனால் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் வாக்கு கேட்டு கூட செல்லவில்லை என்று விமர்சனங்கள் இருந்தன.
அதேபோல் அதிமுகவின் தோல்விக்கு மற்றொரு காரணமும் உள்ளது. மதுரையில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவிற்கு உள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதோடு, பாஜக கூட்டணி சார்பாக இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டார். இதனால் முக்குலத்தோர் சமூக வாக்குகள் பாஜகவுக்கு அப்படியே திசை மாறியுள்ளது தெரிய வந்துள்ளது.
சரவணன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், முக்குலத்தோர் சமூக மக்களுக்கு ஓபிஎஸ் செண்டிமெண்ட்-டாக இருந்து வருகிறார். இதன் காரணமாகவே மதுரையில் அதிமுக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் மதுரையில் பாஜக வேட்பாளர் இராம ஸ்ரீனிவாசன் எதிர்பார்த்ததை விடவும் அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications