தென் தமிழக அரசியலில் நிரந்தரம் (ம)துரை! மு.க.அழகிரி மகனை வாழ்த்தி ஆதரவாளர்கள் போஸ்டர் அலப்பறை!
மதுரை: தென் தமிழக அரசியலில் நிரந்தரம் (ம)துரை என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் அடித்து ஒட்டி மு.க.அழகிரி மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.
தனது அப்பாவுக்கும் சித்தப்பா ஸ்டாலினுக்கும் இடையே மனக்கசப்பு இருப்பினும் கூட, உதயநிதி உள்ளிட்ட குடும்ப உறவினர்களோடு தொடர்ந்து நல்லுறவை பேணி வருகிறார் துரை தயாநிதி.

மதுரையின் பிரதான பகுதியான கோரிப்பாளையத்தை சுற்றிலும் துரை தயாநிதியை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்க்கின்றன. செப்டம்பர் 27ஆம் தேதி முக அழகிரி மகன் துரை தயாநிதிக்கு பிறந்தநாள். இன்னும் அதற்கு 20 நாட்கள் உள்ள நிலையில் இப்போதே அலப்பறையை ஆரம்பித்துவிட்டனர் அவரது ஆதரவாளர்கள்.
துரை தயாநிதி தற்போது சென்னையில் செட்டிலாகிவிட்டாலும் கூட அவரை இன்னும் மதுரை அரசியலில் இருந்து அவரது தந்தையின் ஆதரவாளர்கள் விடுவதாக இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் துரை தயாநிதியை மதுரை மக்களவை தொகுதியில் களமிறக்க வேண்டும் என்ற ஆசையையும் அழகிரி ஆதரவாளர்கள் வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்த போஸ்டருக்கும் துரை தயாநிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அவரை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். முக அழகிரி மீதுள்ள விசுவாசத்தின் காரணமாக இது போன்ற போஸ்டர்கள் அடித்து ஒட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. மதுரையை பொறுத்தவரை ஜிகர்தண்டாவுக்கு மட்டுமல்ல போஸ்டர்களுக்கும் பெயர் பெற்ற ஊராக மாறிவிட்டது.
மதுரையில் அரசியல் கட்சியினரோ, நடிகர்களின் ரசிகர்களோ, யார் போஸ்டர் அடித்தாலும் பிரம்மாண்ட சைஸ்களில் போஸ்டர்கள் அடித்து அதில் இடம்பெறும் வாசகங்கள் கவனம் ஈர்க்கும் வகையில் பார்த்துக் கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications