திருப்பதி, சபரிமலை போல் தமிழக கோயில்களிலும் ஆன்லைன் தரிசன முறை! ஹைகோர்ட் கிளையில் வழக்கு!
மதுரை: தமிழக முக்கிய கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு வரும் நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வதை தடுக்க ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் முறை அமலில் உள்ளது. இதில் தலா 300 ரூபாய் கட்டணம் செலுத்தி, நமக்கு தோதுவான தேதிகளில் புக் செய்து கொண்டு செல்லலாம்.

இது தற்போது 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வகையில் உள்ளது. அது போல் டிக்கெட் இல்லாமல் கட்டணமில்லா தரிசனமும் உள்ளது. இதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்த இலவச தரிசனத்திற்கும் எஸ்எஸ்டி டோக்கன் என்பது கோயில் வளாகத்தில் உள்ள கவுன்ட்டர்களில் வழங்கப்படும்.
இதை வாங்கிக் கொண்டால் கூண்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்யலாம். அது போல் தமிழக கோயில்களிலும் கொண்டுவர வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: அந்த வகையில் தமிழக கோயில்களின் நிலத்தை மீட்க கோயில் சொத்துகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வு பெற்ற நீதித் துறை அதிகாரிகள், அறிவு ஜீவிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.
கோயில் நில வாடகை, குத்தகை, மக்கள் செலுத்தும் பூஜை கட்டணத்தை ஆன்லைனில் வசூலிக்க வேண்டும். கோயில் நிலம் மற்றும் சொத்துக்களை தனிநபரின் பெயருக்கு சாதகமாக மாற்றக் கூடாது. கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் நெரிசல் ஏற்படுகிறது. குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே சபரிமலை, திருப்பதி கோயில்களில் உள்ள தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைமுறை மூலம் எந்த இடையூறும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யலாம். ஊழியர்கள் பணம் வசூலித்து தரிசனம் செய்ய அனுமதிக்கும் முறைகேடுகளை தவிர்க்கவும் இது நல்ல வாய்ப்பாக அமையும்.
தமிழகத்தின் முக்கிய கோயில்களில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழக அறநிலையத் துறை செயலாளர், கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவம்பர் 12 ஆம்தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications