தமிழக அரசு ஊழியர்களின் அறிவிப்பிற்கு எதிராக வழக்கு.. மதுரை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
மதுரை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ, ஜியோ) சார்பில் சமீபத்தில் திருச்சியில் மாநில அளவிலான கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு இருப்பது சட்டவிரோதம் என்று கூறி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ, ஜியோ) சார்பில் சமீபத்தில் திருச்சியில் மாநில அளவிலான கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார்கள்.

தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளன. அதனை மீறும் வகையில் தமிழக அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு இருப்பது சட்டவிரோதம் ஆகும். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே ஜாக்டோ, ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட தடை விதித்து உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் வக்கீல் ராம்குமார் ஆதித்தன் கூறியிருந்தார்.
இந்த வழக்கில், தமிழக அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே சுமூக பேச்சுவார்த்தை முடியும் வரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து விசாரணையை ஏப்ரல் மாதம் 23-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications