மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வாழ்க்கை குறிப்பு
மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 1980களில் இருந்து 40 ஆண்டுகளாக மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாக உள்ளார். இவர் பல்வேறு கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி உள்ளார்.
தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த மடத்தின்கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோயில், திருப்புறம்பியம் காசிநாத சுவாமி கோயில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. இந்த ஆதீனத்துக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன.

இந்த ஆதீனத்தின் 292-வது குருமகா சன்னிதானம் தான் அருணகிரிநாதர், இவர் 1980 ஆண்டில் இருந்து தொடர்ந்து சுமார் 41 ஆண்டுகளாக மதுரை ஆதீனமாகப் பொறுப்பில் இருக்கிறார் . இவர் ஆரம்பம் முதலே பல நல்ல விஷயங்களைச் செய்து வந்தார். பல ஆயிரம் கோயில்களில் இவர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.ஏராளமான பள்ளி, கல்லூரி, கோவில் நிகழ்ச்சிகளில்,இவர் சொற்பொழிவாற்றி உள்ளார். இவர் முன்னாள் பத்திரிக்கையாளர் ஆவார்
அருணாகிரி நாதர் 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமனம் செய்ததால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது, இவர் தனக்கு அடுத்ததாக 293 வது பீடாதிபதியாக நித்யானந்தாவை தேர்ந்தெடுப்பதாக அறிவித்தார். அத்துடன் நித்யனந்தாவிற்கு மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்றும் பட்டமளித்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியது. இந்நியமனத்தை காஞ்சி, திருவாவடுதுறை ஆதீன மடங்கள் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் கடுமையாக எதிர்த்தன.
இந்நியமனத்துக்கு பல்வேறு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து, பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்கப் போவதாகத் தகவல்கள் பரவின. இதையடுத்து 2012-ம் ஆண்டே நித்யானந்தாவை வாரிசுப் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிடுவதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். இதையடுத்தே நித்யானந்தா நியமனம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications