இந்துக்களை அவமதித்துவிட்டார்... விஜய் படங்களை பார்க்காதீர்கள் - புயலை கிளப்பும் மதுரை ஆதீனம்
மதுரை: திரைப்படத்தில் இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய நடிகர் விஜய்யின் படங்களை பார்க்காதீர்கள் என மதுரை ஆதீனம் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
விசுவ இந்து பரிஷத்தின் அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் மாநிலம் தழுவிய துறவியர் மாநாடு மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கியது.
கர்நாடகாவில் மீண்டும் தலைதூக்கும் ஹிஜாப் விவகாரம்: 6 மாணவிகள் இடைநீக்கம்
நேற்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் இதன் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், பேரூர் ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாதா?
இந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், "தற்போது பாரதியார் இருந்திருந்தால் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என்று பாடி இருப்பார். மதுக்கடைகள் ஆதிக்க அதிகரித்து இருக்கிறது. அரசியல் கோயில்களிலும் புகுந்துவிட்டது. ஆன்மீகவாதிகள் ஆரசியல்பேசக் கூடாது என சொல்கிறார்கள். நாங்கள் ஏன் அரசியல்பேசக்கூடாது? நாங்கள் பேசாமல் வேறு யார் பேசுவது?
அறநிலையத்துறை
கோயில் சொத்துக்கள் தொலைந்துபோகின்றன. தமிழ்நாட்டின் பண்பாடும் கலாச்சாரமும் கோயில்களுக்குள்தான் இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு கோயிலில் என்ன வேலை உள்ளது? அவர்கள் தர்க்காராக கோயிலில் வந்து அமர்ந்துகொள்கிறார்கள். கோயில் நகைகள் உருக்கப்படும் என்கிறார்கள். ஆனால், எங்கு உருக்குகின்றனர் எனத் தெரியவில்லை. அறநிலையத்துறை அதிகாரிகள் விபூதி பூசுவத்தில்லை. கோயிலில் என்ன நடக்கிறது என்றே அவர்களுக்கு தெரிவதில்லை.
கோயில் உண்டியல்
அறநிலையத்துறையை கலைத்துவிட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கோயில்களை கொண்டு வர வேண்டும். சாமி வருவதைபோல் கோயில் உண்டியல் வருகிறது. பொதுமக்கள் இந்து அறநிலையத்துறை வைக்கும் உண்டியலில் காசு போடாதீர்கள். அந்த நிதி கோயிலுக்கு வராமல் வேறு எங்கோ செல்கிறது. அரசியல்வாதிகள் திருவாசகத்தைகூட திருடிவிட்டார்கள். என்னுயிர் தலைவா என்று சொல்வதை தல என மாற்றிவிட்டார்கள்.
திராவிட பூமி
இறந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டு திராவிட பூமி என அழைக்கிறார்கள். ஆன்மீகத்தை திருடி திராவிடம் என்று சொல்கிறார்கள். திராவிடத்தின் அர்த்தம் என்ன என்று சீமான் எழுப்பிய கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை. திராவிட பாரம்பரியம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூசுவதில்லை. ரம்ஜான் வந்தால் மட்டும் குல்லா அணிந்து கொள்கிறார்கள்.
விஜய் திரைப்படங்கள்
திரைப்படத்தில் இந்துக்களை அவமதிக்கும் விதத்தில் பேசிய நடிகர் விஜயின் படங்களை பார்க்காதீர்கள். கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்ப்பதன் காரணமாக என்னை சங்கி என்று சொல்கிறார்கள். சாமியார்கள் யாசகம் பெற்று சாப்பிட வேண்டும் என்று கூறிய சு.வெங்கடேசன் ஒருவாரம் என்னுடன் இருந்திருந்தால் சுருண்டுவிடுவார். சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும் அதே நேரம் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் ஏன் தூக்கக்கூடாது?" எனக் கூறி இருக்கிறார்.