அரசியல்வாதிகளுக்கு கோயில்ல என்ன வேலை?.. அடுத்த பிறவியில் வவ்வாலாக பிறப்பீர்கள்.. மதுரை ஆதீனம் சாபம்
மதுரை: "இவர்கள் எல்லாம்" அடுத்த பிறவியில் வவ்வாலாக பிறப்பார்கள் என மதுரை ஆதீனம் பேசியுள்ளார். மேலும் அரசியல்வாதிகளுக்கு கோயிலில் என்ன வேலை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
மதுரை பழங்காநத்தத்தில் விஸ்வ இந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், "பாரதியார் தற்போது இருந்திருந்தால் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என பாடியிருந்திருப்பார். அந்தளவுக்கு மதுக்கடைகள் ஆதிக்கம் இங்கே அதிகரித்துள்ளது.

அரசியல்
கோயில்களுக்குள் அரசியல் புகுந்துவிட்டது. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக் கூடாது என நினைக்கிறார்கள். நாங்கள் ஏன் அரசியல் பேசக் கூடாது? அரசியலை நாங்கள் பேசாமல் வேறு யாரு பேசுவது? அரசியல்வாதிக்கு கோயிலில் என்ன வேலை? கோயிலில் இப்போது ஒன்றும் இல்லை.

அரசியல் பேச விரும்பவில்லை
நான் அரசியல் பேச விரும்பவில்லை. ஆனால் தற்போது பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். ஒவ்வொரு கோயில்களிலும் இவ்வளவு குத்தகை பாக்கி என எழுதி வைத்துள்ளார்கள். நம்மாளுங்களும் பணத்தை கொடுப்பதில்லை. குத்தகை கேட்டால் குத்துவதற்கு கை வருகிறது. கோயில் இடத்தில் கடை வைத்திருப்பார்கள் வாடகை கொடுக்க மாட்டார்கள்.

குத்தகை கேட்டால் குத்து விழுகிறது
கோயில் வீட்டில் குடியிருப்பார்கள் அதற்கும் வாடகை கொடுக்க மாட்டார்கள். நிலம் வைத்திருப்பார்கள், சாமியா கேட்டாலும் அதற்கு வாடகை கொடுக்க மாட்டார்கள். இந்த மாதிரி வாடகை கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தால் அடுத்த பிறவியில் அவர்கள் எல்லாம் வவ்வாலாக பிறப்பார்கள். நான் சாபம் கொடுக்கிறேன் என்றால் வேறு என்ன செய்வது? திருக்கோயில் சொத்துகள் எல்லாம் தொலைந்து போகிறது.

கோயில் சாமி சிலை
கோயில் சொத்து போச்சு, கோயில் சாமி சிலையும் போயிற்று. பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் காணாமல் போன சிலைகளை எல்லாம் வெளிநாட்டிலிருந்து மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார். கடவுளையும் புராணங்களையும் இழிவுப்படுத்தி பேசி வருகிறார்கள். இதை சொன்னால் என்னை சங்கி என்கிறார்கள். கோயில் நம்மை விட்டு போனால் நமது சமயமும் நம்மை விட்டு போய்விடும் என்றார் மதுரை ஆதீனம். ஏற்கெனவே குத்தகை பணம் கட்டாதவர்கள் வவ்வாலாக பிறப்பீர்கள் என மதுரை ஆதீனம் தஞ்சாவூரில் கடந்த மார்ச் மாதம் சாபம் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications