அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த சம்பவம்.. மன்னிப்பு கேட்ட பேருந்து நிலைய உதவியாளர்
மதுரை: மதுரை ஆரப்பாளையத்தில் ஓட்டுனரை காலணியால் அடித்த உதவி மேலாளர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். பேருந்தை முன்கூட்டியே இயக்குவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓட்டுனர் மீது பேருந்து நிலைய உதவி மேலாளர் காலணியால் அடித்து தாக்கிய வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி இருந்தது. இதையடுத்து அரசு பஸ் ஓட்டுனரை காலணியால் அடித்த உதவி மேலாளர் மாரிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் ஓட்டுனர் கணேசனிடமும், அரசிடமும் மன்னிப்பு கேட்டு மாரிமுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை டிரைவர் கணேசன் ஓட்ட இருந்தார். பயணிகள் பஸ்சில் ஏறிய நிலையில் பஸ் எப்போது புறப்படும் என்று டிரைவர் கணேசனிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போது இது பற்றி பேருந்து நிலைய உதவி மேலாளர் தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்துவிடம் பயணிகள் கேள்வி எழுப்பினர். அப்போது இந்த பஸ் போகாது, வேறு பஸ்சில் செல்லுங்கள் என்று மாரிமுத்து கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஏன் இதனை முதலிலேயே சொல்லியிருக்கலாமே.. இவ்வளவு நேரம் காத்திருந்த பிறகு இப்படி கூறினீர்கள் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டிருக்கிறார்கள்.
அப்போது டிரைவர் கணேசன் உதவி மேலாளர் அறைக்கு ஆவேசமாக வந்த நிலையில், திடீரென நீ தான் பயணிகளை எனக்கு எதிராக திருப்பி விடுகிறாயா என்று கேட்டு செருப்பால் தாக்கினார். இதனை பயணிகள் சிலர் வீடியோவாக எடுத்தனர். இதையடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதன்பின்னர் அரசு ஓட்டுனரை செருப்பால் தாக்கிய சம்பவத்தில் பேருந்து நிலைய உதவியாளர் மாரிமுத்துவை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் பேருந்து நிலைய உதவியாளர் மாரிமுத்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அரசு பஸ் ஓட்டுனர் கணேசன் மற்றும் அரசிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் வீடியோ வெளியிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications