கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இன்றிலிருந்து வரும் 23ம் தேதி வரை 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது. வரும் 27ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
தினமும் மதுரை மாநகரில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவின் 7-ம் நாளான நேற்று காலை, சுந்தரேஸ்வரர் பிச்சாடனார் ரூபத்தில் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். , இரவில் யாழி வாகனத்தில் மீனாட்சி அம்மனும், நந்தி வாகனத்தில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடையுடன் எழுந்தருளியும் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இன்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நாளை மறுநாள் 21-ந்தேதி நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 22-ல் நடைபெறுகிறது.
இதற்காக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் 6.25 மணி அளவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு வையாழி ஆகி தங்கப்பல்லக்கில் கள்ளழகர், மதுரை நோக்கி புறப்பட்டு வருகிறார். அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும் கள்ளழகர், வழியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். மொத்தம் 483 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார்.
இந்நிலையில் மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இன்றிலிருந்து வரும் 23ம் தேதி வரை 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வைகை அணையில் 60 அடி தண்ணீர் இருப்பதால் தண்ணீர் திறப்பதில் எந்த சிக்கலும் இல்லை.
முன்னதாக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக முறைப்பாசன அடிப்படையில் 5 நாட்கள் அணையில் இருந்து நீர் திறந்தும், 5 நாட்கள் நிறுத்தியும் வருகின்றனர். மார்ச் 12ல் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் மார்ச் 17 காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications