மதுரை சித்திரை திருவிழா! அழகரை எந்த இடத்தில் எந்த நேரத்தில் தரிசிக்கலாம்! இதோ அட்டவணை!
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும் நிலையில் அழகர்கோயிலில் இருந்து அவர் எழுந்தருளும் முக்கிய இடங்கள், அதன் நேரத்தை காணலாம்.
மதுரையின் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 1ஆம் தேதி நடைபெற உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில், அதிகாலை 5.35 முதல் 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் பிரவேசிப்பார்.

அழகர் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் மீண்டும் அழகர் கோயிலுக்குத் திரும்பும் வரையிலான முக்கிய இடங்கள் மற்றும் நேரங்கள் குறித்து முழுமையான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் திருவிழாவை நிறைவு செய்த மதுரை மக்கள், தற்போது சித்திரை திருவிழா கொண்டாட்டங்களுக்கு ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.

ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவில், ஏப்ரல் 28ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 29ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து, மே 1ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருளும் பிரதான வைபவம் அரங்கேறும்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுகளுக்காக, மதுரை மாநகர காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து விரிவான ஏற்பாடுகளைத் திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில், ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு அழகர் மலையிலிருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கிப் புறப்படுவார்.
ஏப்ரல் 30ஆம் தேதி அதிகாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் மதுரை மூன்றுமாவடி அருகே கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும்.
அதே நாள் இரவு 11.00 மணி முதல் 11.59 மணிக்குள், தல்லாகுளத்திலிருந்து தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள கள்ளழகர் புறப்படுவார். மே 1ஆம் தேதி அதிகாலை 5.35 - 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் அவர் பிரவேசிப்பார். அன்று பிற்பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறும்.
மே 2ஆம் தேதி காலை 11.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை, வண்டியூர் வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி இடம்பெறும். அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மேல் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும். இந்த நிகழ்வு பக்தர்களை இரவு முழுவதும் ஆன்மீகத்தில் திளைக்கச் செய்யும்.
மே 4ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து, தல்லாகுளத்தில் உள்ள மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலை நோக்கி கள்ளழகர் புறப்படுவார். இறுதியாக, மே 5ஆம் தேதி காலை 10.40 - 11.10 மணிக்குள் கள்ளழகர் அழகர் மலைக்கு சென்றடைந்து திருவிழா நிறைவு பெறும்.














Click it and Unblock the Notifications