சாலையில் பிறந்தநாள் பார்ட்டி.. கேள்விகேட்ட முதியவர் மீது ஸ்பிரே அடித்து அராஜகம்! சிக்கிய "சில்வண்டு"
மாணவர்கள் சாலையின் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் கேக் வெட்டி பிறந்தநாள் பார்ட்டியில் ஈடுபட்டனர். மேலும், இதை கெத்தாக நினைத்துக்கொண்டு ரீல்ஸ் வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தனர்.
மதுரை: பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்தி கல்லூரி மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மேலும், "ஏன் இப்படி வாகனங்களை சாலையில் நிறுத்தி அட்டூழியம் செய்கிறீர்கள்" என கேட்ட முதியவர் முகத்திலும் ஸ்ப்ரே அடித்து அவர்கள் திமிர்த்தனத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து, கல்லூரி மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடரும் அட்டூழியம்
மதுரையில் சமீபகாலமாக இளைஞர்கள் சிலர் அத்துமீறி நடந்து கொள்வது அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள பெண்கள் கல்லூரிகளுக்குள் இளைஞர்கள் சிலர் கஞ்சா போதையில் சென்று அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் தமிழத்தையே உலுக்கியது. அதேபோல, கல்லூரி மாணவிகளை கேலி செய்ததை தட்டிக் கேட்டதால் ஒரு மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் சிலர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுபோன்ற ஒரு அராஜக சம்பவம்தான் மீண்டும் மதுரையில் நடந்திருக்கிறது.

நடுரோட்டில் பிறந்தநாள் பார்ட்டி
மதுரை மேலூர் - சிவகங்கை சாலையில் உள்ள ஆட்டுக்குளம் விலங்கு பகுதி. எப்போதும் அதிக அளவிலான வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கும் இந்தப் பகுதியில் நேற்று கல்லூரி மாணவர்கள் சிலர் தங்கள் பைக்குகளை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்தனர். இது, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சலாக இருந்தது. இதையடுத்து, அந்த மாணவர்கள் சாலையின் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் கேக் வெட்டி பிறந்தநாள் பார்ட்டியில் ஈடுபட்டனர். மேலும், இதை கெத்தாக நினைத்துக்கொண்டு ரீல்ஸ் வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தனர்.

முதியவர் முகத்தில் ஸ்பிரே
இந்நிலையில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் வந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், ஏன் இப்படி சாலை நடுவே பைக்கை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள் எனக் கேட்டார். இதனால் அந்த மாணவர்கள், முதியவர் என்றும் பாராமல் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மாணவன், பிறந்தநாள் பார்ட்டிக்கு பயன்படுத்தப்படும் நுரை ஸ்பிரேவை எடுத்து அந்த முதிய தம்பதியினர் முகத்தில் அடித்தார்.

கொத்தோடு தூக்கிய போலீஸ்
இதனால் அதிர்ச்சி அடைந்த முதிய தம்பதியர், தங்கள் மீது விழுந்த நுரைகளை தட்டிவிட்டு மனவேதனையுடன் அங்கிருந்து சென்றனர். இதனிடையே, மாணவர்களின் இந்த அராஜகத்தை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மதுரை காவல்துறை ட்விட்டர் பக்கத்திலும் இந்த வீடியோவை டேக் செய்து புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், முதியவர் மீது ஸ்பிரே அடித்த ஆட்டுக்குளத்தை சேர்ந்த சிவமணி என்ற கல்லூரி மாணவனை போலீஸார் கைது செய்து, சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடிய அவரது நண்பர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.












Click it and Unblock the Notifications