மதுரையே குலுங்குது.. "திருப்பியடிக்கும்" எடப்பாடி பழனிசாமி.. டக்குனு பார்த்த டெல்லி.. "பழம்" கனியுதா
மதுரை: அதிமுகவின் மாநாடு, மதுரையில் ஆகஸ்ட் 20 ம் தேதி நடக்கவுள்ள நிலையில், சில முக்கிய எதிர்பார்ப்புகளை இந்த மாநாடு ஏற்படுத்தி வருகிறது.
மதுரையில் நடக்க போகும் மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்த்தால், பிரம்மாண்டமாகவே நடக்கும் என்று தெரிகிறது.. மாநாடு நிகழ்ச்சிகளும் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டு வருவதால், கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 8 மணிக்கு கட்சிக்கொடியேற்றி மாநாட்டை எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க, கவியரங்கமும், கருத்தரங்கமும், பட்டிமன்றமும், நாளெல்லாம் நடக்க உள்ளன.. அடுத்து கலை நிகழ்ச்சிகள் நடக்க போகின்றன.. அன்றைய தினம் மாலையில், உரையாற்றுகிறார் எடப்பாடி பழனிசாமி.
திரைப்படம்: இந்த மாநாட்டையொட்டி புகைப்படக் கண்காட்சி நடக்க போகிறது.. இந்த கண்காட்சியில் அதிமுக வரலாறு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திரைப்படம், அரசியல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன...
விழாவை காணும்வகையில், பிரமாண்டமான டிஜிட்டல் திரையும் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.. ஆங்காங்கே எல்இடி திரைகளும் வைக்கப்படுகின்றன. அதேபோல, நகரின் முக்கிய பகுதிகளிலும் எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், மாநாட்டு நிகழ்ச்சிகளும் லைவ் ஆகவே ஒளிபரப்பாக போகிறதாம். 1.25 லட்சம் நாற்காலிகள் தொண்டர்களுக்காக போட உள்ளார்கள்.. காலை 7 மணிமுதல் இரவு 7 மணி வரையிலும் இடைவிடாது உணவு வழங்கப்படுகிறது...
சமையல் பணியாளர்கள்: இட்லி, பொங்கல், வடை, உப்புமா, சட்னி, சாம்பார், மதியம் வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், காய்கறிக் கூட்டு, பொரியல், அப்பளம் போன்றவை பரிமாறப்படுகிறது.. இந்த சமையல் பணிக்காகவே, 10,000 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 3 இடங்களில் 300 கவுன்டர்களில் பாக்கு மட்டை தட்டில் உணவு வழங்க முடிவாகி உள்ளது. வாகனங்களை நிறுத்த 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு, 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
10 லட்சம் குடிநீர் பாட்டில்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.. ஆங்காங்கே சின்டெக்ஸ் தொட்டிகளில் குடிநீர் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. பந்தல் அருகே 150 மொபைல் கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன... இதைத்தவிர, தற்காலிக கழிப்பறைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாடு என்றதுமே, அரசியல் களத்தில் கவனத்தை பெற்று வருகிறது.. ஏற்கனவே முக்குலத்தோர் மீதான அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமி சிக்கி உள்ளார்.. இந்த அதிருப்தியை நீக்கி, வாக்கு சதவீதத்தை தென்மண்டலங்களில் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே, ஆர்பி உதயகுமாருக்கு பெருத்த முக்கியத்துவத்தையும் தந்து, முக்கிய பொறுப்புகளையும் வழங்கினார் எடப்பாடி.
செல்வாக்கு என்ன: ஆனால், இந்த 2 வருட காலமாகவே, எதிர்பார்த்த அளவுக்கு தென்மண்டலத்தில் எடப்பாடியால் ஆதரவை பெற முடியவில்லை என்கிறார்கள்.. ஓபிஎஸ்ஸுக்கு எந்த அளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கிறதோ அது உறுதியாக தெரியவில்லை..
எந்த ஒரு தேர்தல் நடந்தாலும்தான், தலைவர்களின் நிஜ பலம் தெரியவரும். அந்தவகையில், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவுகள் தென்மண்டலத்தில் ஓரளவு இருப்பதாக சொல்லப்பட்டாலும், டிடிவி தினகரனுக்கு அபரிமிதமாகவே ஓட்டு வங்கி உள்ளது. இதை கடந்த தேர்தல்களில் அமமுக நிரூபித்தும் உள்ளது.
பிடிவாதம்: இப்போது ஓபிஎஸ் + டிடிவி ஒரே அணியில் திரண்டுள்ள நிலையில், இவர்களது செல்வாக்கையும் உடைக்க வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்றிணைந்த அதிமுகவுக்கு, மேலிட பாஜக பெருத்த முயற்சி எடுத்து வரும்நிலையில், அந்த விஷயத்திலும் எடப்பாடியின் பிடிவாதம் தொடர்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நடக்க உள்ள மதுரை மாநாட்டில், தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.
ஆக, ஒருபக்கம் முக்குலத்தோர் ஆதரவை சம்பாதிக்க வேண்டும், மறுபக்கம், ஓபிஎஸ், தினகரன் இல்லாமலேயே அதிமுகவுக்கான செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும், இன்னொருபக்கம், ஒட்டுமொத்த அதிமுகவே தன்னுடைய தலைமையின்கீழ் சிறப்பாக செயல்படுகிறது என்பதையும் பறைசாற்ற வேண்டும்.
3 குறிக்கோள்: இந்த 3 குறிக்கோள்களை மையப்படுத்தியே, மதுரையில் களமிறங்குகிறார் எடப்பாடி.. இந்த மாநாடு எந்த அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அடித்தளமாக இருக்க போகிறது என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications