கொரோனா: சென்னையை தொடர்ந்து பெரும் பாதிப்பில் மதுரை! எந்த மாதிரி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்?
மதுரை: மூடிய கடைகள்.. வெறிச்சோடிய வீதிகள்.. தமிழகத்தின் தூங்கா நகரம் என்று புகழ்பெற்ற, மதுரையின் புதிய தோற்றம் இது.
கொரோனா பரவுவதைத் தடுக்க முழுமையான லாக்டவுனின் கீழ் உள்ளது தென் தமிழகத்தின் இந்த மிகப்பெரிய மாநகராட்சி. மதுரையில் நேற்றைய நிலவரப்படி, ஒரே நாளில் 287 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. இதுவரை, 3,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மதுரை நகரத்தில் மட்டும் 2,405 ஆக்டிவ் கேசாக உள்ளன.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் முதல் கேஸ் மார்ச் 25ம் தேதி மதுரையில் பதிவாகியுள்ளது. மே மாதத்திற்குள், மதுரையிலிருந்து மொத்தம் சுமார் 182 கேஸ்கள் பதிவாகியுள்ளன. இதில் மூன்று உயிரிழப்புகள் அடங்கும்.

இ பாஸ் இல்லாமல் சென்ற மக்கள்
இருப்பினும், ஜூன் தொடக்கத்தில் இருந்து, நகரத்தில் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது. சென்னையில் உள்ளோர் மதுரை சென்றதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். சென்னையில் இருந்து இ-பாஸ் இல்லாமல் பலர் மதுரைக்கு வருகை தந்துள்ளனர். ஜூன் 22 முதல் ஜூலை 1 வரை, மதுரையில் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை 153, 137, 97, 203, 190, 217, 284, 290, 246, 297 என்ற அளவுக்கு தினமும் உயர்ந்துள்ளது.

மாநகராட்சி பகுதி
சமீபத்திய புள்ளி விவரம்படி, கொரோனா கேஸ்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை மாநகராட்சி எல்லைகளுக்குள் உள்ள மண்டலத்தில் உள்ளன. மதுரையில் உள்ள அனைத்து 100 வார்டுகளும் (நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன) கொரோனா நோயாளிகளை பதிவு செய்துள்ளன.
ஆபத்து அதிகரித்ததை பார்த்தும், மதுரை மாநகராட்சி பல நடவடிக்கைகளை எடுத்தது. பரவை சந்தையை மூடியதும் அதில் ஒன்றாகும். வெகுஜன பரிசோதனைகளின் அவசியம் உணர்ந்து, பரிசோதனை அதிகரிக்கப்பட்டது. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு திறம்பட சிகிச்சையளிப்பது போன்ற நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

தனியார் மருத்துவமனைகள்
நோயாளிகளின் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் குறைந்தது 700 படுக்கைகளாவது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி ஜி வினய் தெரிவித்திருந்தார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒவ்வொரு தனியார் மருத்துவமனையிலும் 25 சதவீத படுக்கை வசதியை ஒதுக்குமாறு அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தடுப்பு நடவடிக்கை
மதுரை மண்டல கண்காணிப்பு அதிகாரி சந்திர மோகன் கூறுகையில், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க சுகாதாரத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பரிசோதனைகள் மூலம் நாம் மேலும் பல கேஸ்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். ஆரம்பகால நோயறிதலைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதே எங்கள் இலக்கு. மாவட்டங்களில் காய்ச்சல் கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. லாக்டவுன் காரணமாக, கொரோனா பரவல் வேகத்தை குறைத்துள்ளோம் என்றார்.

தனிமைப்படுத்துதல்
மதுரை மாவட்டத்தில் தற்போது 1,598 கேஸ்கள் உள்ளன. இவற்றில், 1,522 அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறி கொண்டவர்கள். அதாவது அவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதி தேவையில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளலாம், அல்லது பராமரிப்பு மையங்களில் தங்கலாம். இதுவரையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொற்றுநோய்கள் லேசானவை அல்லது அறிகுறியற்றவையாகும்.

பல்கலைக்கழகம், கல்லூரிகள்
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், தியாகராஜா பொறியியல் கல்லூரி போன்ற பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், தங்கள் வீட்டில் தனிமை வசதி இல்லாத நோயாளிகளுக்கு இடம் அளித்துள்ளன. 132 உள்நாட்டு விமான சேவைகளின் மூலம் 8,658 பயணிகள் மதுரைக்கு வந்துள்ளனர். மொத்த பயணிகளில், 51 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. சாலை மார்க்கமாக தென் மாவட்டங்கள் செல்வோருக்கு மதுரை ஒரு ஜங்ஷன் பாயிண்ட். எனவே, மதுரையில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னை
நேற்று மாலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,689 ஆக உள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டம், சென்னையின் ஆரம்ப காலகட்ட வேகத்தை போலவே, வேகமாக கொரோனா தொற்றுக்களை பதிவு செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications