வேலம்மாள் ஸ்டேடியத்தில் டிஎன்பிஎல் நடக்குமா? டிஎன்சிஏ தலைவர் கொடுத்த பதில்.. சோகத்தில் மதுரை மக்கள்!
மதுரை: மதுரையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தில் டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு டிஎன்சிஏவின் புதிய தலைவர் ஸ்ரீனிவாசராஜ் பதில் அளித்துள்ளார். மதுரையில் சர்வதேச போட்டிகளை நடத்த வாய்ப்பில்லை என்று கூறிய அவர், டிஎன்சிஏவுடன் இந்த மைதானம் இணைக்கப்பட்ட பின்னரே ரஞ்சி மற்றும் டிஎன்பிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி திறந்து வைத்தார். இந்த மைதானம் தென் மாவட்ட இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச தரத்தில் பிட்ச், மின் விளக்குகள், வீரர்களுக்கான ஓய்வறைகள், டிஜிட்டல் ஸ்கோர் போர்டு அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் வலைப்பயிற்சி கூட்டம், 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள், நவீன வடிகால் வசதி மற்றும் ஒளிபரப்புக்காக 197 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சேப்பாக்கம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய மைதானமாக வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இதனால் தென் மாவட்ட மக்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது.
இனி வரும் காலங்களில் ரஞ்சி டிராபி, டிஎன்பிஎல் உள்ளிட்ட போட்டிகள் வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்திலேயே நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தை விடவும் வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான வசதிகளும் அதிகமாகவே இருக்கின்றன.
இந்த மைதானத்தில் இன்னும் பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டிஎன்சிஏ தலைவராக ஸ்ரீனிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மதுரை வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தில் டிஎன்பிஎல் போட்டிகள் நடத்த வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஸ்ரீனிவாசராஜ் பேசுகையில், மதுரை வேலம்மாள் மைதானத்தில் டிஎன்பிஎல் போட்டிகளை நடத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இன்னும் முழுமையான முடிவு எடுக்கப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தெரிய வரும். அதேபோல் வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் இதுவரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் மதுரையில் கட்டப்பட்டுள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் மற்றும் கோவையில் மாநில அரசால் கட்டப்படும் புதிய மைதானம் ஆகியவற்றில் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் மதுரை மற்றும் கோவை மாவட்ட மக்கள் சோகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications