மதுரையில் மாஸாக உருவாகி வரும் கிரிக்கெட் ஸ்டேடியம்.. மின்விளக்கு பணிகள் ஓவர்.. 3 மாதங்களில் திறப்பு?
மதுரை: மதுரையில் உருவாக்கப்பட்டு வரும் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது கேலரிக்கான மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மே மாதம் கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுடன் ஒப்பிடுகையில் மதுரை மாவட்டத்தின் வளர்ச்சி குறைந்த அளவிலேயே இருக்கும். அதிகளவிலான தொழில்கள், ஆலைகள், மத்திய அரசு நிறுவனங்கள் என்று மதுரையில் அதிகளவில் இடம்பெறவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மதுரையில் அடுத்தக்கட்ட வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே மதுரையில் டைடல் பார்க் பணிகள் தொடங்கவுள்ளது.

இதனிடையே மதுரையில் உள்ள இளைஞர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு வந்தன. ரிங்ரோடு பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனை வளாகம் அருகில் இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டிலேயே கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக உருவாகி வருகிறது. 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கைகள் கொண்ட வசதி, இரு அணிகளின் வீரர்களுக்கான ஓய்வறை, அவர்களுக்கான ஜிம் வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை வசதி, கார் பார்க்கிங் வசதி உள்ளிட்டவையுடன் உருவாகி வருகிறது.
இதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதேபோல் பெங்களூர் மைதானத்தை போல் மழை பெய்தாலும் ஆட்டம் விரைவாக தொடங்கும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மைதானத்தை சுற்றி 5 அடியளவில் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக ரூ.36 கோடி செலவில் மதுரையில் கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மைதானத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசித்து ஃபிளட் லைட்ஸ் அமைக்கப்பட்டு வந்தது. இந்த பணிகள் கடந்த வாரம் முடிவடைந்துள்ளது.
தற்போது பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் கேலரிக்கான மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் விரைந்து முடிவடையும் பட்சத்தில், மே மாதத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த மைதானம் திறக்கப்பட்டால் டிஎன்பிஎல் மற்றும் ரஞ்சி டிராபி போட்டிகள் மதுரையில் நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications