AI நிறுவன முதலீடு.. மதுரையை தேர்ந்தெடுத்தது ஏன்? இளைஞர்களின் கவனத்தை பெற்ற பெண் நிர்வாகியின் பதில்!
சென்னை: சென்னை போன்ற பெருநகரங்களில் ஏஐ நிறுவனத்தை தொடங்காமல், மதுரையில் ரூ.200 கோடி முதலீடு செய்தது ஏன் என்ற கேள்விக்கு Bonblock டெக்னாலஜிஸ் நிர்வாகி அளித்துள்ள பதில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவும் தென் மாவட்ட மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் Bonblock டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் ரூ.200 கோடி முதலீடு செய்ய உள்ளதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இதன் மூலமாக 2 ஆயிரம் முதல் 2,500 வரையிலான மதுரை மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் ஏஐ தொழில்நுட்ப நிறுவனம் முதலீடு செய்திருப்பது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மதுரையில் டைடல் பார்க் அமைந்த பின், இன்னும் ஏராளமான முதன்மை ஐடி நிறுவனங்களும் முதலீடுகளை அதிகமாக செய்யும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் Bonblock டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் உள்ள பெண் நிர்வாகி கலந்து கொண்டார். அவரிடம் ஐடி நிறுவனங்கள் சென்னையில் தான் வழக்கமாக முதலீடு செய்வார்கள். ஆனால் நீங்கள் ஏஐ தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்க மதுரையை தேர்ந்தெடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், மதுரையின் பெயரிலேயே AI இருக்கிறது.. அங்கு ஓடும் வைகையில் 2 AI இருக்கிறது.. இவ்வளவு ஏன் இட்லி, தோசையில் கூட ஏஐ இருக்கிறது.. இது சிரிப்பை வரவழைக்க சொல்லப்பட்ட பதில்தான். எங்களை பொறுத்தவரை நல்ல பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்கள், திறமைசாளிகள் இருக்கும் போது மதுரையில் நிறுவனத்தை தொடங்குவதில் எந்த தவறும் கிடையாது.
நாங்கள் ஏற்கனவே சென்னையில் அலுவலகம் வைத்திருக்கிறோம். ஆனால் எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் 150 பேரில், வெள்ளிக்கிழமையானால் பஸ் ஏறி உடனடியாக மதுரைக்கு சென்றுவிடுவார்கள். அதனால்தான் மதுரை தேர்வு செய்தோம் என்று தெரிவித்துள்ளார். இந்த பதில் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னையில் உள்ள சிறிய நிறுவனத்திலேயே 20 முதல் 30 பேர் வரை மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பணியாற்றி வருகின்றனர். அப்படியென்றால் பெரிய நிறுவனங்கள், பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் எத்தனை லட்சம் பேர் பணியாற்றுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் மதுரைக்கு மிகப்பெரிய அளவில் ஐடி முதலீடுகளை தமிழக அரசு கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications