காக்கவைத்த திமுக.. ஓபிஎஸ் பக்கம் சாயும் டாக்டர் சரவணன்! மதுரையில் என்ன பண்ணி வச்சுருக்கார் பாருங்க!
மதுரை : மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய சம்பவத்துக்கு முன்னாள் பாஜக மாவட்ட தலைவரான டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் திமுகவில் சேரப் போவதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் சரவணன் இல்ல திருமண நிகழ்வுக்கு ஓபிஎஸ்ஸை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்களை திமுகவினரே சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லெட்சுமணனின் உடல் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த வந்த போது பாஜகவினருடன் மோதல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து பாஜகவினரை வெளியேற்ற உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அப்போது பாஜகவினர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து திரும்பிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர்.
கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தை கையில் எடுத்த பாஜக அண்ணாமலை! தமிழக அரசு மீது விமர்சனம்
மதுரை சரவணன்
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், காவல்துறையினர், அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து அமைச்சரின் கார் அங்கிருந்து சென்றது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் அன்று இரவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். இதனையடுத்து பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார்.
ஓபிஎஸ் உடன் ஐக்கியம்?
இதனை அடுத்து திமுகவில் சரவணன் சேரப் போவதாக அடுத்தடுத்து யூகங்கள் பரவின. மேலும் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்தி சில பாஜக முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் டாக்டர் சரவணன் திமுகவின் இணைவார் என கூறப்பட்டது. அதற்கேற்றார் போல் சில பாஜக நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர். அதே நேரத்தில் சொன்னது போல மாநாடு அல்லது அதிகாரப்பூர்வ இணைப்பு போன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை. இந்த நிலையில் தான் ஓபிஎஸ் பக்கம் மதுரை டாக்டர் சரவணன் இணைந்து விட்டதாக தகவல்கள் உலாவி வருகின்றன.
திருமண நிகழ்ச்சி
காரணம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வு. மதுரை டாக்டர் சரவணன் இல்ல திருமண நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம்புலி, சிங்கமுத்து, எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதேபோல இரவு என்றும் பாராமல் ஓ.பன்னீர்செல்வம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதை அடுத்து நேற்று திருமணம் நடைபெற்றது.
பேனர்கள்
இந்த நிகழ்வில் ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்று மதுரை டாக்டர் சரவணன் வைத்துள்ள பேனர்கள்தான் தற்போது யூகங்களை கிளப்பி விட்டு இருக்கிறது. பொதுவாக சமூகம் சார்ந்த நிகழ்வு என்பதால் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அதற்காக சரவணன் ஆதரவாளர்கள் பிளக்ஸ் பேனர்கள் வைத்தார்கள் எனக் கூறப்பட்டாலும். அந்த பிளக்ஸ் பேனர்களில் அதிமுக கொடிகளும் கட்டப்பட்டிருந்தது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படமும் அதில் இடம் பெற்றிருந்தது. மேலும் தொண்டர்கள் என யார் பெயரும் இல்லாமல் நேரடியாகவே சரவணன் பெயர் மற்றும் புகைப்படத்துடன் ஓபிஎஸ்ஸை வரவேற்று பேனர் வைக்கப்பட்டிருக்கிறது.
அங்கீகாரம் இல்லை
ஏற்கனவே மதிமுக திமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற சரவணன் மீண்டும் திமுகவுக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டாலும் தற்போது அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் அதிமுகவில் குறிப்பாக தனது சமூகம் சார்ந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தஞ்சம் அடைந்து விடலாம் என நினைப்பதாகவும் அதன் வெளிப்பாடாகவே இந்த பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறுகின்றனர் மதுரை வாசிகள். ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட பேனர்கள் இதேபோல வைக்கப்பட்டிருக்கிறது மதுரை அரசியலில் பரபரப்பை கூட்டி இருக்கிறது. ஒருவேளை ஓபிஎஸ் தரப்பில் சரவணன் இணைந்தால் அது ஆர்பி உதயகுமாருக்கு பெரிய அளவில் போட்டியாக இருக்கும் எனவும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
மறுப்பு
அதே நேரத்தில் மற்றொரு தகவலும் உலா வருகிறது சமூகம் சார்ந்த உறவு காரணமாக ஓபிஎஸ்ஐ வரவேற்று சரவணன் பேனர் வைத்ததாகவும் அதுமட்டுமல்லாமல் அமைச்சர் பிடிஆர், பாஜக நிர்வாகிகள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களை வரவேற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனை பெரிது படுத்துவது சரியாக இருக்காது எனக் கூறி வருகின்றனர். இருந்தபோதும் பாஜக நிர்வாகிகளையும் திமுக நிர்வாகிகளையும் வரவேற்று பெரிய அளவில் பேனர்கள் வைக்கப்படாத நிலையில் ஓபிஎஸ் பேனர்கள் மட்டும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உண்மை என்ன? கதவுகளை அடைத்து விட்டதா திமுக? ஓபிஎஸ் அணியில் இணையப் போகிறாரா சரவணன் என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.