மாவட்டச் செயலாளராகும் டாக்டர் சரவணன்.. மதுரையில் தேர்தல் பணிகள் விறுவிறு.. மக்கள் சந்திப்பு ஜரூர்.!
மதுரை: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் மதுரை மாவட்ட திமுகவில் பெரியளவிலான மாற்றங்களை செய்யவிருக்கிறது அக்கட்சியின் தலைமை.
மதுரை மாநகர், மதுரை புறநகர் தெற்கு -வடக்கு, என மூன்றாக உள்ள இந்த மாவட்ட அமைப்பு முறை இனி நான்காக மாற்றியமைக்கப்பட உள்ளது.
அந்த வகையில் மூர்த்தி, சேடப்பட்டி முத்தையா மகன் மணிமாறன், ஆகியோரோடு திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் சரவணனுக்கும் மாவட்டப் பொறுப்பாளர் பதவி கிடைக்கக்கூடும் எனத் தெரிகிறது.

நிர்வாக அமைப்பு
மதுரை மாவட்ட திமுகவை பொறுத்தவரை நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக கோ.தளபதியும், மதுரை புறநகர் வடக்கிற்கு மூர்த்தி எம்.எல்.ஏ.வும், மதுரை புறநகர் தெற்கிற்கு சேடப்பட்டி முத்தையா மகன் மணிமாறனும் மாவட்டச் செயலாளராக உள்ளார்கள். இந்நிலையில் தற்போது மூன்றாக உள்ள மாவட்ட நிர்வாக அமைப்பு நான்காக மாற்றப்பட்டு திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.சரவணன் கூடுதல் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படவுள்ளார்.

மதுரை வடக்கு
வரும் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியை சேடப்படி முத்தையா மகன் மணிமாறன் எதிர்பார்ப்பதால் அங்கிருந்து மதுரை வடக்கு தொகுதிக்கு ஷிப்ட் செய்கிறார் சரவணன். இப்போதே மதுரை வடக்கு தொகுதியில் அதற்கான பணிகளை ஜரூராக மேற்கொண்டு வருகிறார். அகமுடையார் சமுதாயத்தினரும், இஸ்லாமியர்களும் அதிகம் உள்ளதால் மதுரை வடக்கு தொகுதியில் சீட் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் சரவணன். இதனிடையே அந்த தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்டதால் மீண்டும் இந்த முறை காங்கிரஸ் சீட் கேட்கும் எனத் தெரிகிறது.

ஸ்டாலின் குட்புக்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இடைத்தேர்தலுக்காக அவரது கையெழுத்து போலியாக பெறப்பட்டது என்ற புகாரை கிளப்பி அதனை நீதிமன்றம் வரை கொண்டு சென்றார் சரவணன். இதுமட்டுமல்லாமல் இதுவரை அதிமுகவின் கொடிபறந்த திருப்பரங்குன்றத்தை முதல்முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக கைப்பற்றினார். இப்படி ஸ்டாலினின் குட்புக்கில் சரவணன் இடம்பெற்றிருப்பதால் மதுரை வடக்கு தொகுதி இந்த முறை காங்கிரசுக்கு செல்ல வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

30 ஒன்றியங்கள்
திமுக தொடங்கப்பட்டது முதல் மதுரை மாவட்டத்தில் பிரிக்கப்படாத ஒன்றியங்கள் இப்போது பிரிக்கப்பட்டு அதற்கான ஒப்புதலுக்கு தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே மதுரை மாவட்ட திமுக நிலவரம் பற்றி அறிய திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு விரைவில் அங்கு ஒரு விசிட் அடிக்க இருக்கிறார். அவரது வருகைக்கு பிறகு மதுரை மாவட்ட திமுகவில் மாற்றங்களை காணலாம்.












Click it and Unblock the Notifications