எம்எல்ஏ சீட் இல்லையா.. கட்சித் தாவிய எஸ்ஸார் கோபி.. மதுரையில் அதிமுக பக்கம் மாறும் சமூக வாக்குகள்!
மதுரை: மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்களாக கருதப்பட்ட மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்திருப்பது பல்வேறு கணக்குகளை மாற்றி இருக்கிறது. இதன் மூலமாக மதுரையில் முக்குலத்தோர் சமூக வாக்குகளை அதிமுக அறுவடை செய்யும் சூழல் உருவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அரசியலில் தீவிரமாக இருந்த போது, அவரின் நிழலாக இருந்தவர்கள் மன்னன், எஸ்ஸார் கோபி, இசக்கிமுத்து, பொட்டு சுரேஷ், கோபிநாதன், முபாரக், சின்னா, ஜெயராம், விகே குருசாமி உள்ளிட்டவர்கள். அப்போது மதுரை கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதால், மக்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர்.

மு.க.அழகிரி ஆதரவாளர்களின் சேட்டை காரணமாகவே மதுரையில் திமுக பல்வேறு தேர்தல்களிலும் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தது. ஆனால் ஸ்டாலின் திமுகவை கைக்குள் கொண்டு வந்த பின், மு.க.அழகிரியின் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஒரு கட்டத்தில் 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின், அமைச்சர் மூர்த்தியை பவர் சென்டராக மாற்றினார்.
அதேபோல் அழகிரியின் பக்கம் இருந்த பலரும் ஸ்டாலின் அணிக்கு தாவினர். ஆனால் ஸ்டாலின் அவர்களுக்கு எந்தப் பதவியும் கொடுக்கவில்லை. இதில் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ள தளபதிக்கு மட்டுமே ஸ்டாலின் பொறுப்பு கொடுத்தார். எஸ்ஸார் கோபி நீண்ட நாட்களாக காத்திருந்த போதும், ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை.
இதனிடையே அண்மையில் மதுரையில் சபரீசன் 2 நாட்கள் முகாமிட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர் மூர்த்தி தரப்புடன் ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போதே மதுரையில் உள்ள 10 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியல் முடிவு செய்யப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் ஆகியோரை கட்டாயம் வீழ்த்த வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
அப்போது எஸ்ஸார் கோபி தரப்பில் தங்களுக்கு மதுரை தெற்கு அல்லது திருப்பரங்குன்றம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது. 2021 சட்டசபைத் தேர்தலின் போதும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு எஸ்ஸார் கோபி காய் நகர்த்தினார். ஆனால் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. இம்முறையும் சபரீசன் ஏற்காததால், உடனடியாக அதிமுக பக்கம் சாய்ந்திருக்கிறார்.
மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி ஆகியோருக்கு மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு உள்ளிட்ட தொகுதிகளில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. முக்குலத்தோர் சமூக மக்களிடையே நல்ல ஆதரவும் இருக்கிறது. எந்தப் பதவியில் இல்லையென்றாலும், இந்த 3 தொகுதிகளில் நடக்கும் வீட்டு நிகழ்ச்சிகளில் எஸ்ஸார் கோபி தொடர்ச்சியாக பங்கேற்பது வழக்கமானது.
இதனால் திமுகவுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகி இருக்கிறது. முக்குலத்தோர் சமூக வாக்குகளை அதிமுக பக்கமாக கொண்டு செல்லும் பணிகளில் இவர்கள் இருவரும் ஈடுபடக் கூடும். அதுமட்டுமல்லாமல் திமுகவில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலரையும் அதிமுக பக்கமாக நகர்த்தக் கூடிய வல்லமை உள்ளது. இதனால் அமைச்சர் மூர்த்தி தரப்புக்கு புதிய சவால் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications