ஜெயலலிதாவின் ‛டயலாக்’கில் சின்ன மாற்றம்! அரசியலுக்கு வருவாரா நடிகர் அஜித்? இந்த போஸ்டரை பாருங்க!
மதுரை: உழைப்பாளர் தினமான நாளை நடிகர் அஜித்துக்கு பிறந்தாளாகும். இந்நிலையில் தான் மதுரையில் நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் வகையில் பிரமாண்டமாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறும் வசனத்தில் சின்ன மாற்றம் செய்து ரசிகர்கள் போஸ்டரை உருவாக்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த நிறையபேர் சாதித்துள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நடிகராக இருந்து அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் முதல்வர் பதவியை எட்டிப்பிடித்தார். அதன்பிறகு நடிகையாக இருந்த ஜெயலலிதா முதல்வரானார்.
மேலும் நடிகர் விஜயகாந்த தேமுதிக கட்சியை தொடங்கி எதிர்க்கட்சி தலைவரானார். நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி எம்எல்ஏவானார். அதேபோல் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார்.

இதுதவிர திமுக, அதிமுக, அமமுக, பாஜக என பல கட்சிகளில் நடிகர், நடிகைகள் செயல்பட்டு வருகின்றனர். இதில் பலர் எம்பிக்களாகவும், எம்எல்ஏவாக்களாக பதவி வகித்துள்ளனர். நீண்டகாலமாக நடிகர் ரஜினியை அரசியலுக்கு வரும்படி அவரது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவார்கள். ஆனால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என முற்றுப்புள்ளி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக நடிகர் விஜயை அரசியலுக்கு வரும்படி அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்ட தொடங்கினர். தற்போது நடிகர் விஜயும் தொகுதி வாரியாக வாக்காளர்கள் விபரங்கள், பூத் விபரங்கள், நிர்வாகிகளின் விபரங்கள் உள்பட பல்வேறு விஷயங்களை தனது விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார். இதன்மூலம் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரலாம் என கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது நடிகர் அஜித்தையும் அரசியலுக்கு வரும்படி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். உழைப்பாளர் தினமான மே 1ம் தேதியான நாளை அஜித் தனது 52வது பிறந்தாளை கொண்டாட உள்ளார். ஆண்டுதோறும் அஜித் பிறந்தநாளன்று அவர்களின் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரை வித்தியாசமான முறையில் அடித்து ஒட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் தான் நாளை அஜித்தின் பிறந்தநாளை சிறப்பாக கொண்ட அஜித் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த முறையும் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் நடிகர் அஜித் பிறந்தநாளையொட்டி மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரசியலுக்கு வர வேண்டும் எனக்கூறி அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரில் அஜித்தின் பின்னணியில் தலைமை செயலகத்தின் படம் இருக்கிறது. மேலும் போஸ்டரில் ‛‛மக்களால் நீங்கள்.. மக்களுக்காகவே நீங்கள்'' உங்கள் சேவை... இப்போழுது தமிழ்நாட்டுக்கு தேவை என எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை தூங்காநகரம் அஜித் பேன்ஸ் ஒட்டியுள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ‛‛மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்'' என தனது கணீர் குரலில் கூறியது தமிழ்நாட்டு மக்களிடம் மிகவும் பாப்புலரானது. ஜெயலலிதாவின் இந்த டயலாக்கை தான் தற்போது அஜித் ரசிகர்கள் சற்று மாற்றி ‛‛மக்களால் நீங்கள்.. மக்களுக்காகவே நீங்கள்'' என போஸ்டர் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications