வீரப்பன் என்கவுன்டர் போலீஸுக்கு நிம்மதி! அதிரடிப்படையின் பலன்களை வாபஸ் பெற கூடாது! ஹைகோர்ட் உத்தரவு!
மதுரை: வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படை எஸ்ஐ-கள் பெற்ற பலன்களை வாபஸ் பெற கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்கும் அதிரடிப்படையில் பணிபுரிந்து பதவி உயர்வுபெற்ற உதவி காவல் ஆய்வாளர்களின் பலன்களைத் திரும்ப பெறக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் 2004-ல் சிறப்பு அதிரடிப்படையால் கொல்லப்பட்டார். இதனால் அதிரடிப்படையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்த 900-க்கும் மேற்பட்டோருக்கு ஒரு படிநிலை விரைவுப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் 16 காவலர்கள் எஸ்ஐகளாக பதவி உயர்வு பெற்றனர். இவர்கள் பதவி உயர்வு பெற்ற நேரத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வந்ததால் 2009-ல் பதவி இறக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 16 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில், விரைவுப் பதவி உயர்வு என்பது ஒரு படிக்கு மட்டுமே என்பதால், எந்த நிலையிலும் அது ஒரு தனிநபருக்கு விரைவான தொடர் பணிமூப்பை வழங்காது. பதவி உயர்வு பெற்ற மேல்முறையீட்டாளர்கள், பதவி உயர்வு வழங்கப்பட்ட நேரத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்ததால் நாயக் பதவிக்குத் தரம் குறைக்கப்பட்டனர் என வாதிடப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், மனுதாரர்களுக்கு 2004-ல் வெளியிடப்பட்ட அரசாணை அடிப்படையில் மாநில அரசால் தவறாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திய சந்தனக் கடத்தல் வீரப்பனைக் கொன்ற சிறப்பு அதிரடிப்படையில் மனுதாரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அபாயகரமான நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர்.
இதனால் மனுதாரர்களுக்கு காவல்துறை உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றிய காலத்தில், பதவி உயர்வு பெற்ற நாளிலிருந்து அவர்கள் பெற்ற அனைத்துப் பலன்களையும் மாநில அரசு திரும்பப் பெறக் கூடாது என உத்தரவிட்டனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட 'ஆபரேஷன் கக்கூன்' வெற்றிக்குப் பிறகு, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடிப்படை (STF) வீரர்களுக்கு ஏராளமான சலுகைகள், சன்மானங்களை வழங்கினார். அதிரடிப்படை நடவடிக்கையில் ஈடுபட்ட 752 பேருக்கும் தலா ₹3 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அடுத்தடுத்த பதவிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதிரடிப் படை வீரர்களுக்கு குடியிருக்க வீட்டுமனையும், வீரதீரச் செயலுக்கான பதக்கங்களும் வழங்கி ஜெயலலிதா கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications