டெல்லி திகார் சிறை பெண் சப் இன்ஸ்பெக்டர் திருநெல்வேலிக்கு திடீர் இடமாற்றம்.. மதுரை ஐகோர்ட் தடை
மதுரை: டெல்லி திகார் சிறையில் சிறப்பு காவல் படைப்பிரிவின் சார்பில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் திடீரென நெல்லை மணிமுத்தாறு சிறப்பு காவல் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவரை இடமாற்றம் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "டெல்லி திகார் சிறையில் சிறப்பு காவல் படைப்பிரிவின் சார்பில் சப்-இன்ஸ்பெக்டராக 22 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். அங்கு என்னுடைய உயர் அதிகாரி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தேன். மேலும் விசாகா கமிட்டி விசாரணை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த பாலியல் குற்றச்சாட்டு விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் எந்தவித முறையான காரணமும் இன்றி டெல்லியில் இருந்து என்னை நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு காவல்படைக்கு இடமாற்றம் செய்து கடந்த 20-ந்தேதி உயர் அதிகாரி உத்தரவிட்டார்.
ஆனால் என்னுடைய 2 பெண் குழந்தைகளும் டெல்லியில் பள்ளிப்படிப்பை தொடர்ந்து வருகிறார்கள். இன்னும் சில வாரங்களில் அவர்களுக்கு தேர்வு தொடங்க உள்ளது. இந்த சூழ்நிலையில் என்னை காரணம் இன்றி பணியிட மாற்றம் செய்தது சட்டவிரோதம். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் பினேகாஸ் என்பவர் ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடுகையில், உயர் அதிகாரி மீது பாலியல் புகார் தெரிவித்த காரணத்தினால்தான் பழிவாங்கும் நோக்கத்துடன் மனுதாரர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இது சட்டவிரோதம். இந்த நடவடிக்கையால் மனுதாரரின் 2 குழந்தைகளின் கல்வியும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை இருக்கிறது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
விசாரணை முடிவில், மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு வருகிற பிப்ரவரி 18-ந்தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கு குறித்து காவல்துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வரும் பிப்ரவரி 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications