பணத்தை திருடிட்டாங்கே மொதலாளி.. என்னாது.. அய்யா நான்தாய்யா திருடினேன்!
Recommended Video
மதுரை: தானே திருடிய பணத்தை காணவில்லை என காவல்துறையினரிடம் நாடகமாடியவர் கையும் களவுமாக சிக்கினார்.
மதுரை மேலமாசி வீதி கந்தமுதலி தெரு பகுதியில் நித்திஷ் ஜெயின் என்பவர் எலெக்ட்ரானிக் மொத்த வியாபாரம் நிறுவனம் நடத்திவருகிறார். அந் நிறுவனத்தில் மதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பணிபுரிந்துள்ளார்.
தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தனது நிறுவனத்திடம் எலெக்ட்ரானிக் உபகரணங்களை வாங்கிய சிறுசிறு கடைகளிலிருந்து பணம் வசூல் செய்துவிட்டு வருமாறு நித்திஷ் கூறிய நிலையில் பிரகாஷ் பல்வேறு பகுதிகளுக்கு சென்று 1 லட்சத்து 44ஆயிரம் ரூபாயை வசூல் செய்துவிட்டு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் மதுரை கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே தன்னிடம் இருந்த பணத்தை மர்மநபர்கள் வழிப்பறி செய்துவிட்டதாக தனது முதலாளியிடம் கண்ணீர் மல்க பிரகாஷ் கூறியதையடுத்து காவல்துறையினருக்கு தொலைபேசி புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஜெய்ஹிந்த்புரம் போலிசார் பணத்தை இழந்ததாக கூறிய ஊழியர் பிரகாஷை அழைத்து சென்ற போலிசார் விசாரணையை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலிசார் வழக்கம்போல தனது விசராணையை தீவிரபடுத்த தொடங்கி உதையோடு சேர்ந்த கிடுக்குபிடி விசாரணையால் கதிகலங்கிய பிரகாஷ் தானே பணத்தை எடுத்துவிட்டு வழிப்பறி நாடகம் நடத்தியதாகவும், அந்த பணத்தை தனது நண்பரான வில்லாபுரத்தை சேர்ந்த பாலுமணி என்பவரிடம் கொடுத்து அனுப்பி தனது கடனை அடைக்க சொன்னதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து பிரகாஷ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பாலுமணி ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர். பணத்தை பறிமுதல் செய்தனர். பணத்தை தானே திருடிவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடி முதலாளியை ஏமாற்றிய நிலையில் போலிசாரின் விசாரணையில் உண்மையை ஒப்புகொண்டு சிறைசென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.