தைப்பூச தெப்பத்திருவிழா மீனாட்சி சொக்கநாதரை தரிசிக்க பிப்.8ல் மதுரைக்கு வாங்க
தை மாதம் பூச நட்சத்திர நாளில் நடைபெறும் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றது. மதுரையில் மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச தெப்பத்திருவிழா பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுரை: மூலவராக இறைவனும் இறைவியும் அருள்பாலிப்பது ஒருவகை. உற்சவர்களாக உள்ள தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் எழுந்தருளி பக்தர்களை தேடி வருவது மற்றொருவகை. தெப்பத்திருவிழா சமயங்களில் நீர்நிலைகளின் பெருமையை போற்றும் வகையில் இறைவனும் இறைவியும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் தருவார்கள். தை மாதம் பூச நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளில் பல கோவில்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெறும் இதே போல சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் ஆலயத்திலும் மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழாவைக் காண கண் கோடி வேண்டும்.
கோவில் நகரம் எனப் போற்றப்படும் மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் தைப்பூச திருவிழா வரும் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு வாய்ந்த தைப்பூச தெப்பத்திருவிழா வரும் பிப்ரவரி 8ஆம் தேதியன்று மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினம், காலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு தெப்பக்குளம் சென்று காலை 8:35 மணி முதல் 9 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளுவார்கள்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் என்றாலே மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டு தான் இருக்கும். காரணம் சிவபெருமான் தன்னுடைய திருவிளையாடல்களை நடத்திய பெருமை பெற்ற நகரமாகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருவிழா நடைபெறும் என்பதாலேயே, இங்குள்ள வீதிகளின் பெயர்களும் தமிழ் மாதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன. குறிப்பாக, சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, தை, மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில நடைபெறும் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவையாகும்.
ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு... தந்தை பெரியார் மிகப் பெரும் தலைவர்... ஹைகோர்ட் நீதிபதி ராஜமாணிக்கம்
பிரம்மாண்ட தெப்பக்குளம்
மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தை மாதம் நடைபெறும் தைப்பூச தெப்பத்திருவிழா புகழ்பெற்றதாகும். தெப்பத்திருவிழாவானது, மீனாட்சியம்மன் கோவிலின் கட்டுப்பாட்டிலுள்ள உபகோவிலான மாரியம்மன் கோவில் தெப்பத்தில் நடைபெறும். இந்த தெப்பக்குளம் 1000 அடி நீளமும், 950 அடி அகலமும், சுமார் 16 அடி ஆழமும் கொண்ட பிரமாண்ட தெப்பக்குளமாகும். இத்தனை சிறப்பு வாய்ந்த தெப்பக்குளத்தில் தான் வரும் பிப்ரவரி 8ஆம் தேதியன்று தைப்பூச தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.
கொடியேற்றம்
ஜனவரி 28ஆம் தேதியன்று சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தெப்பத்திருவிழா தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர், பஞ்ச மூர்த்திகளுடன் காலை, இரவு என இரண்டு வேளைகளிலும் நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வருவார்கள். தைப்பூச தெப்பத்திருவிழாவின் 6ஆம் நாளன்று திருஞானசம்பந்தரின் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 8ஆம் நாளன்று மச்சகந்தியார் திருமணக்காட்சியும் நடைபெறும்.
தெப்பத்திருவிழா கோலாகலம்
10ஆம் நாளன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், 11ஆம் நாளன்று அனுப்பானடியில் கதிரறுப்பு திருவிழாவும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வரும் பிப்ரவரி 8ஆம் தேதியன்று நடைபெறும். அன்றைய தினம் காலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி, கோவிலில் இருந்து புறப்பட்டு மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் சென்று, அங்கு காலை 835 மணி முதல் 9 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளுவார்கள். பின்பு, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தெப்பத்தை 2 முறை வலம் வருவார்கள். அதைத் தொடர்ந்து மாலையில் சுவாமி தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர், இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை வலம் வருவர். அப்போது சுவாமியை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரளுவார்கள்.
சென்னையில் தெப்பத்திருவிழா
பிறவியெனும் கடலில் விழுந்தவர்களை இறைவனின் கருணையே தெப்பமாக இருந்து கரை சேர்ப்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் தெப்பத்திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தெப்ப உற்சவம் நடக்க வேண்டுமென்றால் குளத்தில் நீர் நிறைந்திருக்கவேண்டும். ஊருக்கு நடுவே குளத்தில் நீர் நிறைந்திருந்தால் ஊரில் தண்ணீர் பஞ்சமே வராது. வீட்டில் பணத்தை சிக்கனமாகச் செலவழித்தால் பணத்தட்டுபாடே வராது எனத் தண்ணீர், பணம் இரண்டிற்கும் காரகனான சுக்கிரன் விளக்கும் படியாக அமைந்ததுதான் தெப்பம். தெப்பத்திருவிழாவை காண்பவர்களுக்கு வண்டி வாகன யோகம் தேடி வரும்.