ரூ.500 டிக்கெட்! மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.. கட்டண சீட்டு முன்பதிவு ஆரம்பம்! இ-பாஸ் உண்டு
மதுரை: மதுரையில் உலகப்பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள், சுவாமி சன்னிதி முன் கொடியேற்றம் நடக்கிறது. இந்நிலையில், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரில் காண கட்டண சீட்டுகள் முன்பதிவு ஆரம்பமாகியிருக்கிறது. இதுகுறித்து பக்தர்களின் வசதிக்காக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
சித்திரை திருவிழா இன்று அதாவது 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் வலம் வருவர்.

இதனிடையே, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரில் காண ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் முன்பதிவு இன்று அதாவது, 29-ந் தேதி தொடங்கி வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது.
கோவில் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் இன்று முதல் மே-2 ந் தேதி இரவு 9 மணி வரை இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அடையாள அட்டை - கட்டணம்
மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டை இன்று முதல் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை நகல், மொபைல் எண், இ-மெயில் முகவரி அவசியம். அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் மே 3-ந் தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.
சம்பந்தப்பட்டோர் மே 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்., இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண கட்டண சீட்டை பெறலாம். ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண சீட்டை மட்டுமே பெற முடியும்.
கட்டண ரசீதுகள்
ரூ.200 கட்டண சீட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணசீட்டை பெற முடியாது. பிறந்த தேதியை சரியாக பூர்த்தி செய்து இருக்க வேண்டும். ஒரு பதிவுக்கு ஒரு மொபைல் எண் மட்டுமே பயன்படுத்த முடியும்" என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
முன்னதாக, மதுரை சித்திரை திருவிழாவை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சு.வெங்கடேசன் எம்பி, மதுரை மேயர் இந்திராணி, வெங்கடேசன் எம்எல்ஏ , உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்எப்ஐடி பாஸ்
இந்த கூட்டத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை பொதுமக்கள் சிரமம் இல்லாமல் தரிசிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது, சித்திரை திருவிழா காண வரும் பக்தர்களுக்கு பல இடங்களில் குடிநீர் வசதி, மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பிறகு, மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு கியூஆர் கோடுடன் ஆர்எப்ஐடி பாஸ் வழங்கப்படும் என்றும் கோயிலுக்கு வெளியே முந்தைய சித்திரை திருவிழாவின் அனுபவங்கள் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்படும். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் அமைச்சர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications