பசியின் கோரம்.. தெரு நாய்கள் சாப்பிட்டு மிஞ்சிய உணவை சாப்பிட்ட முதியவர்.. ஓடோடி உதவிய இளைஞர்
மதுரை: மதுரை அருகே பசியின் கொடுமையால் நாய் சாப்பிட்ட உணவை சாப்பிட்ட முதியவருக்கு அப்பகுதி இளைஞர்கள் உதவி செய்தனர்.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சாய் மயூர் என்ற இளைஞர், நாள்தோறும் தெருக்களில் அலையும் சமூக நாய்களுக்கு சொந்த செலவில் உணவுகளையும், பிஸ்கெட்டுகளையும் வழங்கி வருகிறார்.
மேலும் தெரு நாய்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டாலோ, தெரு நாய்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினாலோ நாயை மீட்பதற்காகவே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை வைத்துள்ளார்.

கோழி கடை
தினமும் தானாகவே கோழி கடைகளில் சில்லறை இறைச்சிகளை வாங்கி அதனை அரிசி சாதத்துடன் மஞ்சள் சேர்த்து நாய்களுக்கு வழங்கி வருகிறார். தனது பைக்கில் சாப்பாட்டை எடுத்துச் சென்று மாநகரின் பல்வேறு பகுதியிலும் உள்ள தெரு நாய்களுக்கு வழங்கி வருகிறார். இந்நிலையில் இன்று காலை மதுரை காந்தி மியூசியம் அருகேயுள்ள கால்நடை மருத்துவமனை அருகேயுள்ள நாய்களுக்கு உணவை போட்டுள்ளார்.

மீதமிருந்த உணவு
அதனை நாய்கள் சாப்பிட்ட பின்பாக மீதியிருந்த உணவை அந்த பகுதியில் சாலையோரமாக படுத்து கிடந்த முதியவர் ஒருவர் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த சமூக ஆர்வலர் மயூரி இது நாய் சாப்பிட்ட சாப்பாடு இதனை சாப்பிடாதீர்கள் என தடுத்து அவரை அழைத்து சென்று அருகில் உள்ள டீகடையில் வடை, பஜ்ஜி உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்து பசியாற்றினார்.

மதுரை
தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது மதுரை புதூர் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த முகம்மது ஹனிபா (57) என கூறினார். மேலும் தனக்கு தகப்பனார் தவிர யாரும் இல்லை என கூறி விவரங்களை முழுமையாக கூறவில்லை. இதனையடுத்து சமூக ஆர்வலர் மயூரி டீ கடையில் முகம்மது ஹனிபா தினசரி என்ன கேட்டாலும் சாப்பிட வழங்குங்கள் எனவும் அதற்கான தொகையை மாதம்தோறும் செலுத்திவிடுகிறேன் என கூறியுள்ளார்.

தனிமனிதனுக்கு உணவில்லை
தனிமனிதனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழித்திடுவோம் என்பது பாரதியின் மொழி. மதுரையில் முதியவர் ஒருவர் பசி காரணமாக நாய் சாப்பிட்டு மீதி வைத்த உணவை சாப்பிட்ட அவலமும் அரங்கேறியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற முதியவர்களை முதியவர்கள் இல்லம் போன்றவற்றில் சேர்த்து விடலாம் என்றால் பல்வேறு சட்ட சிக்கல்கள் மற்றும் காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட உறவினர் இல்லை என்ற சான்று ஆகியவை கிடைப்பதில் உள்ள சிக்கலால் இல்லங்களில் சேர்க்க முடியாத நிலை உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சட்ட சிக்கல்கள்
இந்த சட்ட சிக்கல்களுக்கு தீர்வு கண்டாலாவது இது போன்ற அவலங்கள் நடைபெறாமல் முதியவர்களை பாதுகாக்கலாம் என்பது அவர்களின் கோரிக்கையாகவும் உள்ளது. மயூரியின் செயல்பாட்டை பார்த்த அப்பகுதி மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இவர்களை போல் யாராவது உணவுக்கு கஷ்டப்பட்டால் அவர்களுக்கு உணவு வாங்கி கொடுங்கள் என மயூரி அறிவுறுத்தியுள்ளார். தானத்தில் சிறந்தது உணவு தானம் என்பதால் இதனை செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications