Madurai train fire: டீ போட சிலிண்டரை ஆன் செய்த பயணிகள்.. ரயில் பெட்டியை பூட்டிக் கொண்டது ஏன்?
மதுரை: ரயில் பெட்டியை பூட்டி வைத்துவிட்டு சமைத்ததே இதற்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 55 க்கும் மேற்பட்டோர் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயில் மூலம் கடந்த 17ஆம் தேதி தமிழகம் வந்துள்ளனர்.

இவர்கள் சுற்றுலா ரயிலில் ராமேஸ்வரம் சென்றுள்ளனர். அப்போது ஒரு ரயில் பெட்டியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. குபுகுபுவென ஏற்பட்ட தீவிபத்தில் 9 பேர் பலியாகிவிட்டனர். அதில் 8 பேரின் அடையாளம் தெரிந்துவிட்டது.
இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவர் ஆணா, பெண்ணா என்பது கூட அடையாளம் தெரியாத நிலை உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மதுரை ஆட்சியர், அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். இறந்தவர்களின் உடல்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த விசாரணையில் தீப்பிடித்ததற்கு இவர்கள் ரயிலில் கொண்டு சென்ற சிலிண்டரே காரணம் என சொல்லப்படுகிறது. இந்த சிலிண்டர் வெடித்ததில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது தெரியவந்தது. அதாவது ரயில் பெட்டியை பூட்டிக் கொண்டு இவர்கள் சமைத்ததால் தீப்பிடித்தவுடன் அவர்களால் வெளியேற முடியாமல் உடல் கருகி இறந்தனர்.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு டீ குடிப்பதற்காக சிலிண்டரை ஆன் செய்துள்ளனர். அப்போதுதான் இந்த விபத்து நடந்தது. ரயில் பெட்டியை ஏன் பூட்டினார்கள் என காயமடைந்த பயணிகளிடம் கேட்ட போது வடமாநில கொள்ளையர்கள் யாரேனும் ரயில் பெட்டியில் வந்து கொள்ளையடித்துவிடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதியே ரயில் பெட்டியை உள்பக்கமாக பூட்டிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் சம்பவ இடத்திற்கு வருகை தருகிறார். எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை ரயில்களில் கொண்டு செல்ல தடை இருக்கும் போது இவர்கள் எப்படி சிலிண்டரை கொண்டு சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications