ரயில் பெட்டிக்குள் சட்ட விரோத சமையல்..மதுரை தீ விபத்துக்குக் காரணம்.. ரூ. 10 லட்சம் நிவாரணம்
மதுரை: சட்ட விரோதமாக சிலிண்டரை கொண்டு வந்து ரயில் பெட்டியில் சமைத்ததே தீ விபத்துக்குக் காரணம் என தெற்கு ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மிக பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இன்று அதிகாலை ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீ பற்றியது. இந்த விபத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் உடல் கருகி 9 பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது வரை தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்ப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
ரயில் பெட்டிக்குள் டீ தயார் செய்வதற்காக சிலர் முயற்சித்தபோது சிலிண்டர் வெடித்து இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பரபரப்பான மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் மதுரை மாநகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநிலங்களை போல கொள்ளையர்கள் ரயிலில் ஏறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் ரயில் பெட்டியை பயணிகள் பூட்டி வைத்துள்ளனர். ரயில் பெட்டியை பூட்டி கொண்டு சமைத்ததால் பயணிகள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக 60 பேர் தமிழகம் வந்தனர். பத்மநாபபுரம் அரண்மணையை சுற்றிப்பார்த்து விட்டு இன்று அதிகாலையில் மதுரைக்கு வந்தனர். இரண்டு பெட்டிகள் தனியாக கழற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் சிலிண்டரை பயன்படுத்தி சமைத்த போது தீ விபத்து ஏற்பட்டது. சட்ட விரோதமாக கொண்டு வந்த சிலிண்டரை பயன்படுத்தி சமைக்க முயன்றதே தீ விபத்துக்குக் காரணமாகும். உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து நிகழ்ந்தது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications