தமிழகத்தில் முதல்முறையாக! ரேஸ் கோர்ஸ் சாலை முதல் அத்திக்குளம் வரை.. ஜப்பானாக மாறும் மதுரை! எப்படி?
மதுரை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹெல்த் வாக் டிராக் போல் மதுரையிலும் அமைக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டினார். தோப்பூரில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தார்.

ஆனையூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் முதல்முறையாக மதுரை மாவட்டத்தில் ஹெல்த் வாக் எனப்படும் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையிலான நடைபயிற்சி செய்வதற்கான 8 கிலோ மீட்டர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாதம் ஒரு முறை சுகாதார அதிகாரிகள் நடைபயிற்சிக்கு வருபவருடன் கலந்துரையாடுவார்கள். மீதி நாட்களில் மக்கள் தானாக நடைபயிற்சி செய்ய முன் வருவர். இந்த 8 கிலோ மீட்டர் டிராக் ரேஸ் கோர்ட் சாலையிலிருந்து அத்திக்குளம் சந்திப்பு வரை இருக்கும். ஜப்பானுக்கு சென்ற போது டோக்கியோவில் இந்த ஹெல்த் வாக் டிராக்கை பார்த்த போது நம் தமிழகத்திலும் இதை செய்ய ஆர்வம் ஏற்பட்டது.
மாநிலத்தில் 38 மாவட்டங்களிலும் இது போன்ற ஹெல்த் வாக் டிராக்கை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஹெல்த் வாக் டிராக் பெறும் மாநிலத்தில் முதல் மாவட்டமாக மதுரை விளங்கும். இதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்டவை இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த ஹெல்த் வாக் டிராக் மக்கள் ஆரோக்கியமான வாழ்வியலை வாழ வழிவகை செய்யும்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி ஒரு நபர் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடந்திருக்க வேண்டும். இது 8 கிலோ மீட்டர் டிராக்கில் சராசரியாக வந்துவிடும். அந்த வாக் டிராக்கின் இரு புறத்திலும் மரங்கள் நடப்படும். ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திலும் நடைபயிற்சி மற்றும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்படும்.
அது போல் நடைபயிற்சிக்கு வருவோர் சிறிது நேரம் ஓய்வெடுக்க ஆங்காங்கே இருக்கைகளும் அமைக்கப்படும். மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சுகாதார அதிகாரிகள் வாக்கதான் போட்டிகளை நடத்துவர். இதன் மூலம் ஹெல்த் வாக் டிராக் பிரபலமடையும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications