ஆன்லைன் சூதாட்டம்.. லட்சக்கணக்கில் பறிபோன பணம்.. மதுரை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மதுரை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஹோட்டல் ஊழியர் குணசீலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடிய இவர், லட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்தது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி தீர்ப்பளித்தது.
இதையடுத்து மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த நவம்பா் 3ம் தேதி அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடா்ந்து, 5ம் தேதி சட்டசபை கூட்டப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதேசமயம், அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அரசாணை மட்டும் பிறப்பிக்கப்படாமல் இருந்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
பின்னர் ஆளுநா் கோரியதன் அடிப்படையில், இந்த மசோதா தொடர்பான உரிய விளக்கங்களை தமிழ்நாடு அரசு அளித்தது. ஆனாலும் ஆளுநர் ஆர்என் ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு காலதாமதம் செய்ததால் கடந்த டிசம்பர் மாதமே அந்த தடைச் சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது.

ஆன்லைன் சூதாட்டம்
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து ஆன்லைன் ரம்மி ஆப்களில் பணம் செலுத்தி விளையாடுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தடைச் சட்டம் மசோதா காலாவதியாகி விட்ட நிலையில் தற்போது சட்டம் நிறைவேற்றப்படாததால் மீண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டங்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏராளமானோர் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

மதுரை இளைஞர்
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சாத்தமங்கலத்தைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர் குணசீலன். இவர் கடந்த 6 மாதமாக ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடி வந்துள்ளார். முதலில் பணத்தை வென்றாலும், அடுத்தடுத்த மாதங்களில் பணத்தை இழந்து வந்துள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை
ஒரு கட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான குணசீலன், லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு இளைஞர் குணசீலன் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 42வது தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications