மதுரையில் மஞ்சுவிரட்டு.. பார்வையாளரை முட்டி தூக்கி வீசிய மாடு.. படுகாயமடைந்த இளைஞர் பலி
மதுரை: மஞ்சுவிரட்டு போட்டியை வீட்டு வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இளைஞரை மிரண்டு ஓடிய காளை முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த இளைஞர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப்பொங்கல் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கிராமப்புறங்களில் மாடுகளை அலங்கரித்து, பூஜை செய்து மாட்டுத்தொழுவங்களில் பொங்கல் வைத்து கொண்டாடினர். புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட வீரர்களும் 800க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றன.

பல கிராமங்களில் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்றன. மதுரை மாவட்டம் வளையாங்குளம் பகுதியை அடுத்த எலியார்பாளையத்தில் மஞ்சு விரட்டு போட்டிகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது, ரமேஷ் என்பவர் தனது வீட்டு வாசலில் நின்று காளை ஓட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
சாலையில் வேகமாக ஓடிய காளை ஒன்று, அந்த சாலையிலேயே நின்றது. அப்போது, அந்த வழியாக வந்த லாரி, ஹார்ன் அடித்துள்ளது. இதனால், மிரண்டு போன அந்த காளை, வீட்டின் வாசலில் நின்றிருந்த ரமேஷை முட்டி தூக்கி வீசியது. இதில் ரமேஷின் இடது மார்பில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் ரமேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். கட்டிடத் தொழிலாளியான ரமேஷுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி, தற்போது 1 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகக் கூடக்கோயில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மஞ்சுவிரட்டின் போது காளை முட்டி இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications