“நான் இறந்துவிட்டால்”! தற்கொலைக்கு முன் முதல்வர் ஸ்டாலினுக்கு மானகிரி கணேசன் எழுதிய உருக்கமான கடிதம்
மதுரை: மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கோ.தளபதி வீட்டு முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மானகிரி கணேசன், சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.
மதுரை மாநகர ஆவின் தொழிற்சங்க கவுரவத் தலைவராக இருந்தவர் மானகிரி கணேசன். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றக்கோரி, சிம்மக்கல் பகுதியில் கலைஞர் கருணாநிதி சிலை அருகே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதில் உடல்நலன் பாதிக்கப்பட்ட அவர் சில காலம் ஓய்வில் இருந்தார்.

இதற்கிடையே, திமுகவினர் சிலர் கட்சி பெயரை சொல்லி பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது குறித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக தலைமைக்கும், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆகியோருக்கும் மானகிரி கணேசன் புகார் கடிதம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மூலக்கரை பகுதியில் உள்ள திமுக எம்எல்ஏவும், மாநகர் மாவட்ட செயலாளருமான கோ.தளபதியை மானகிரி கணேசன் சந்தித்து பேசினார். இதையடுத்து, வீட்டை விட்டு வெளியே வந்தவர், எம்எல்ஏ வீடு முன்பே திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, காவல்துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 90% காயத்துடன் மீட்கப்பட்ட அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மானகிரி கணேசன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மானகிரி கணேசன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில், "தமிழக மக்கள் நலன் கருதி அயராது உழைக்கும் முதல்வரின் பணிக்கு இடையூறாக செயல்படும் தமிழக ஆளுநரை கண்டித்து போஸ்டர் ஒட்டினேன். பிறகு ஆளுநரை கண்டித்து தீக்குளித்தேன்.
இதில் உயிர் பிழைத்தாலும் உடல் நிலை மோசமாகி, எந்த நேரத்திலும் இறந்துவிடும் நிலையில் உள்ளேன். யாரும் நலம் விசாரிக்கக் கூட வராத நிலையில் மனம் வெறுத்துப் போய் உள்ளேன். என் நிலையை விளக்கி முதல்வருக்கு அனுப்பினேன். என் கடிதத்திற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் கலைஞர் சிலை முன்பே தீக்குளித்து இறந்துவிடுவேன். ஒருவேளை நான் இறந்தால் திமுக தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகளும் எனது உடலுக்கு மரியாதை செய்யவேண்டும் என்பது எனது நிறைவான ஆசை.
மதுரையில் பணிபுரியும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் நேர்மையானவர். அவர் மூலம் ஒருவரை அனுப்பி கட்சிக்காக எந்த அளவுக்கு உழைத்தேன் என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். நான் இறந்து விட்டால் மதுரை கேகே. நகரில் ஓரிடத்தை ஒதுக்கி, நல்லடக்கம் செய்ய உங்களது கட்டளையின் கீழ் நடக்கும் தொண்டனுக்காக ஓடோடி வரும் அமைச்சர் பி. மூர்த்திக்கு அறிவுறுத்துமாறு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார். இந்தக் கடிதம் மதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications