மெட்ரோ ரயில் தோல்வி அடைந்த திட்டம்.. அது மதுரைக்கு தேவையில்லை.. சீமான் சொன்ன காரணம்!
நெல்லை: நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதி பறிக்கப்படும் என்று சீமான் அறிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டம் தோல்வி அடைந்த திட்டம் என்று சீமான், அது தேவையில்லை என்பதே தனது நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்திற்கு ரூ.10,740 கோடியில் 34.8 கிமீ தொலைவுக்கும், மதுரையில் ரூ.11,368 கோடியில் 32 கிமீ தொலைவுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டப்பட்டது. இதன்பின் இரு மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்த தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பியது.

நீண்ட மாதங்களாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது மத்திய பாஜக அரசு நிராகரித்துள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், தமிழ்நாட்டில் மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
கால்நடைகளிடம் இருந்து பால் கிடைக்காமல் ஆந்திராவில் இருந்து பால் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மலையை வெட்ட அனுமதி கிடையாது. ஆனால் தமிழக அரசு குவாரியாக வெட்ட அனுமதி அளிக்கிறது. தாமிரபரணி நீரை ஒரு பைசாவிற்கு தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் அரசு, மக்கள் நலனில் அக்கறையில்லாததை நிரூபிக்கிறது.
அரசு விற்றால் நல்ல சாராயம்.. அதனை மக்கள் விற்பனை செய்தால் கள்ளச்சாராயம். கள்ளக்குறிச்சி, மரக்காணம் சம்பவங்களுக்கு பின் அரசு விழித்துக் கொள்ளவில்லை. இலவசங்கள் கொடுக்க மக்களிடம் இருந்து பணம் எடுத்து மக்களுக்கு கொடுக்கிறார்கள். இது அன்றாட பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம். மகளிர் உரிமைத் தொகைக்காக ஆண்டுக்கு ரூ.980 கோடி செலவிருகிறார்கள்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் கொடுக்க, ஆண்களிடம் இருந்து அதிக கட்டணத்தை வசூலிக்கிறார்கள். திமுக, அதிமுக கொள்கையில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆட்சியை மாற்ற வேண்டாம்.. ஆட்சி முறையை மாற்ற வெண்டும். தமிழ் வாழ வேண்டும். தேவைப்பட்டால் அனைத்து மொழிகளையும் கற்கலாம். ஆனால் தாய்மொழிக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதி பறிக்கப்படும். மக்களின் பிரச்சனைகள் கேட்கப்படாது.. தீர்க்கப்படும்.. அதேபோல் மெட்ரோ ரயில் திட்டம் என்பது தோல்வி அடைந்த திட்டம். அது கோவை, மதுரைக்கு தேவையில்லாத திட்டம் என்பதே எனது நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications