அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதானாம்!
மதுரை: தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் உள்ள தனது இல்லத்தில் இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஐ.பெரியசாமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாக அதிகரித்திருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரையின்படி மேல் சிகிச்சைக்காக ஐ.பெரியசாமி வழக்கமாகச் செல்லும் மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அமைச்சர் ஐ.பெரியசாமி அங்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முன்னதாக, ஊரகப் பகுதிகளில் ஏற்படும் குறைகளைக் களையும் பொருட்டு 'ஊராட்சி மணி' என்ற அமைப்பு ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க ஊராட்சிகளைத் தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு இலவச குறை தீர்வு அழைப்பு எண் 155340 ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா நிகழ்வுகளில் அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றிருந்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை கருணாநிதியின் பாதுகாவலராகப் பணியாற்றிய ஒருவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இதனால், அவருக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications