கோல்டு காயின் மழை பொழிந்த அமைச்சர் மூர்த்தி! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ருசிகரம்!
மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், வழக்கம் போல் இந்தாண்டும் தங்கக்காசுகளை வாரி இறைத்து கவனத்தை ஈர்த்துள்ளார் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி.
மதுரை வடக்கு மாவட்ட திமுகச் செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான மூர்த்தி மதுரை மாவட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை காலையிலேயே தொடங்கி வைத்ததோடு அங்கிருந்து ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் பெயரில் காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் ஒரு காரும் வழங்குகிறார் அமைச்சர் மூர்த்தி. கடந்தாண்டு உதயநிதி பெயரில் 2 பைக்குகள் வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு கார் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டில் நின்று விளையாடிய காளைகளின் உரிமையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் சொந்த நிதியிலிருந்து தங்கக்காசுகள பரிசளித்து வருகிறார் அமைச்சர் மூர்த்தி. அவரிடம் தங்கக்காசுகளை பெறுவதற்காகவே போட்டி போட்டுக் கொண்டு காளையர்கள் காளைகளை அடக்கி வருகின்றனர்.
''ஜல்லிக்கட்டு நாயகன் அமைச்சர் மூர்த்தி என அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் நொடிக்கு ஒருமுறை கடந்தாண்டு மைக்கில் அறிவித்த வண்ணம் இருந்தனர். ஆனால் இந்தாண்டு அமைச்சர் மூர்த்தி சற்று அடக்கியே வாசிக்கச் சொல்லிவிட்டார் போல். அதனால் புகழாரம் குறைந்திருந்தது.
இன்று மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை போலவே நாளை பாலமேட்டிலும், நாளை மறுதினம் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இன்றை காட்டிலும் நாளை மறுதினம் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காணம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications