கோயில் சொத்துகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை.. பணம் யாருக்கு போகுது? நிர்மலா சீதாராமன் பரபர!
மதுரை: கோயில் சொத்துகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்கின்றனர். கோயில் சொத்துகளை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக மரபு வார விழாவை முன்னிட்டு மதுரை தியாகராஜர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தென் தமிழக குடைவரை கோயில்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லையே எனும் மன வேதனை எனக்கு இருந்தது. தமிழக பாரம்பரியத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும் போது அரசியல் நுழைகிறது. பாரம்பரியம் இது அல்ல அது என பல சர்ச்சைகள் வருகிறது. ஜனநாயக நாட்டில் சர்ச்சைகள் வரலாம், எல்லோரும் எல்லாம் பேசலாம்.

தமிழகத்தின் பாரம்பரியத்தை நம் முன்னோர்கள் பாறைகளில் அருமையாக வடிவமைத்து உள்ளனர். அமைச்சர் வருகிறார் என பாரம்பரிய இடங்களில் வெள்ளை அடித்து விடுகிறார்கள். வெள்ளை அடிக்கப்பட்டதற்கு பின்னால் உள்ள சரித்திரம் யாருக்கும் தெரிவதில்லை. தமிழ் இலக்கியங்களுக்கும், குடைவரை கோவில்களுக்கும் தொடர்புகள் உள்ளன. குடைவரை கோவில்களில் உள்ள எழுத்துக்களுக்கும், தமிழ் மொழி, ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றிற்கும் தொடர்பு உள்ளது.
நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம் தான். அதனை நாம் பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் மருத்துவராக, பொறியாளர்களாக என எது வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் நம்முடைய தமிழ் மரபுகளை அறிந்து பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் சொத்துக்களை திருடி வருகிறார்கள். கோவில்களில் திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு போகிறது என தெரியவில்லை. நம் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு, வெளிநாடு அருங்காட்சியகத்தில் இருக்கும் கோயில் சொத்துகளை நாம் ஆச்சரியமாக பார்க்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications