பதவியேற்புக்கு முன்பே “அமைச்சர்" பதவி.. அதிர வைக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ போஸ்டர்! மிரளும் தவெக
மதுரை: மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பெ.விஸ்வநாதனை "அமைச்சர்" என குறிப்பிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பே விடுக்காத நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏவை அமைச்சர் என அழைத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 2,731 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பொது தொகுதியான மேலூரில், தலித் சமூகத்தைச் சேர்ந்த விஸ்வநாதனை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்தது. மேலூர் தொகுதியில் கடைசியாகத்தான் வேட்பாளரை அறிவித்திருந்தது காங்கிரஸ் கட்சி.

வாக்கு எண்ணிக்கையின்போது, முதல் தொகுதியாக காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி உறுதி செய்யப்பட்ட தொகுதி மேலூர் தான். கடைசியாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் முதல் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார் விஸ்வநாதன்.
மேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றிக்கு தவெகவும் சைலண்ட்டாக உதவி இருப்பதாக பார்க்கப்படுகிறது. தவெக வேட்பாளர் மதுரைவீரன் பெற்ற வாக்குகளே, காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக மாறி இருக்கிறது. இதன் மூலமாக அதிமுகவின் கோட்டையை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி, ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், வரும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியிலும் பங்குபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவி கொடுக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் மேலூர் தொகுதியில் போட்டியிட்ட விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.
35 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மேலூர் தொகுதியை கைப்பற்றியுள்ளது என்பதோடு, பொது தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்தவர் வெற்றி பெற்றார் என்பதால் விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ.விஸ்வநாதனை "அமைச்சர்* என குறிப்பிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இன்னும் விஜய் முதலமைச்சராக பதவியேற்க அழைப்பு விடுக்கப்படாத சூழலில் இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications