பின்னால் நின்ற அமைச்சர் பிடிஆர்! முன்வரிசைக்கு அழைத்த உதயநிதி ஸ்டாலின்! கண்டுகொள்ளாத டி.ஆர்.பாலு!
மதுரை: மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் பின் வரிசையில் நின்றுகொண்டிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை முன் வரிசைக்கு வருமாறு அழைத்து நிறுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மதுரையின் புதிய அடையாளமாக மாறப்போகும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக நூலக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலினை மட்டும் உரிமையோடு கையை பிடித்து இழுத்து முன்னால் ஒட்டி நிற்குமாறு டி.ஆர்.பாலு அக்கறை காட்டினார். உள்ளூர் அமைச்சரும், அந்த நூலகம் கட்டுவதற்கான நிதியை நிதி மந்திரியாக பதவி வகித்த காலத்தில் ஒதுக்கியவருமான பழனிவேல் தியாகராஜனை பற்றி டி.ஆர்.பாலு கண்டுகொள்ளவில்லை. அவரும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதை கவனித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பின்னால் நின்றுகொண்டிருந்த பழனிவேல் தியாகராஜனை முன் வரிசைக்கு அழைத்து நிறுத்தினார். இதன் மூலம் தனக்கும் பிடிஆருக்கும் எந்த பிணக்கும் இல்லை என்பதை உதயநிதி உணர்த்தியுள்ளார். கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவை பொறுத்தவரை முதலமைச்சர் ஸ்டாலினுடன் சீனியர் அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர்.
உள்ளூர் அமைச்சர்களான மூர்த்தியும், பழனிவேல் தியாகராஜனும் சற்று தள்ளியே நிற்கும் சூழல் காணப்பட்டது. அதேபோல் அவர்கள் இருவருமே சரியாக முகம் கொடுத்து பேசிக்கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications