எம்ஜிஆரைபோல.. ஜெயலலிதாவை தவிர.. யாராலும் ஜொலிக்க முடியாது.. செல்லூர் ராஜூ
எம்ஜிஆரை போல யாராலும் இன்று நடிக்க முடியாது என்று செல்லூர் ராஜூ கூறினார்.
Recommended Video

மதுரை: எம்.ஜி.ஆரை போல திரை உலகில் இன்று உள்ள எந்த நடிகராலும் நடிக்க முடியாது. அதே போல அரசியலில் எம்.ஜி.ஆரைப்போல ஜெயலலிதாவை தவிர யாராலும் ஜொலிக்க முடியாது என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன் திரைப்படம் பழமையான மதுரை சென்ட்ரல் திரையரங்க வளாகத்தில் திரையிடப்பட்டது.
இந்த படத்தை பார்ப்பதற்காக தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜூ வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:

ஆர்வம் காட்டுகிறார்கள்
"எம்.ஜி.ஆர் இறந்து 31 வருடங்களாகியும் அவரது ரசிகர்கள் அவரது படத்தை பார்ப்பதில் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். குறிப்பாக இளைய தலைமுறையினர் கூட அவரது படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஒழுக்கமான கதைகள்
திரைப்படத்தின் மூலமாக ஒழுக்கத்தை கற்று கொடுத்தவர் எம்ஜிஆர். இப்படித்தான் மனிதன் வாழ வேண்டும் என கற்று கொடுத்தவர். அவர் நடித்த காலத்தில் நடித்த ஜெமினி கணேசன், சிவாஜி ஆகியோர் கூட நடிப்பதற்காக எந்த கதையையும் தேர்ந்தெடுப்பார்கள்.

ஜொலிக்க முடியாது
ஆனால் எம்ஜிஆர் அப்படி இல்லை. அவர் நடிப்பதற்காக ஒழுக்கமான கதைகளையே தேர்ந்தெடுப்பார். எம்ஜிஆரை போல திரை உலகில் இன்று உள்ள எந்த நடிகராலும் நடிக்க முடியாது. அதே போல அரசியலில் எம்ஜிஆரைப்போல ஜெயலலிதாவை தவிர யாராலும் ஜொலிக்க முடியாது" என்றார்.

சூடம் காண்பித்தனர்
முன்னதாக ரிக்ஷாக்காரன் திரைப்படம் திரையிடப்பட்ட சென்ட்ரல் திரையரங்க வளாகத்தில் எம்ஜிஆரின் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து மலர் மாலைகள் அணிவித்து சூடம் காண்பித்தனர். மேலும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் அவரது பாடலை ஒலிபெருக்கியில் போட்டு நடனமாடியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.












Click it and Unblock the Notifications