3D தரை, விமானம்.. பூரித்துப்போன அமைச்சர்கள்! மதுரையில் அரசு கட்டுவது கலைஞர் நூலகமா? ஏர்போர்டா?
மதுரை: தமிழ்நாடு அரசு மதுரையில் கட்டி வரும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் அதில் வைக்கப்பட்டு உள்ள விமானம், 3டி தரை போன்ற பல்வேறு உள்கட்டமைப்புகளை பார்த்து ஆய்வுக்கு சென்ற அமைச்சர்கள் பூரித்துப்போயினர்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியமைத்த உடன், மதுரையில் முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்து இருந்த பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

அங்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் என்ற பெயரில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் நூலகத்தை தமிழ்நாடு அரசு கட்டி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார். 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களை கொண்ட இந்த நூலக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தைபோல் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி நூல்கள், மத்திய, மாநில அரசு, வரலாறு, கணினி, தொழில்நுட்பம், இலக்கியம், கலை, அறிவியல், சட்டம், விண்வெளி, புவியியல், பணித்தேர்வுகளுக்கான நூல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெற உள்ளன.
குறிப்பாக இந்த நூலகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் இங்கு நூல்கள் வீட்டில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட உள்ளது. அதேபோல் இந்த நூலகம் குறிப்புதவி செய்வதற்காகவும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நூலகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்குமான வசதிகள் உள்ளடக்கப்படும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு சென்றபோது கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட 6 மாத காலத்திற்குள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது மதுரை நூலகத்தின் பெரும் பங்கு பணிகள் நிறைவடைந்துவிட்டன.

கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஜூன் மாதம் கலைஞர் நூற்றாண்டின் தொடக்க நிகழ்வாக இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் கடந்த மாதம் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" என்ற பெயர் இந்த நூலகத்திற்கு அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கிடையே இந்த நூலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நூலகத்தில் உள்கட்டமைப்பு பணிகள், 3டி தரை, விமானம் போன்றவற்றை பார்த்து வியந்தனர். இதுவரை 97% பணிகள் நிறைவடைந்து இருப்பதாகவும், 30 ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications