இப்ப இல்லைன்னா எப்போ? கவுன்சிலர் கனவில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள்! மீண்டும் தொடங்கிய நச்சரிப்பு!
மதுரை: மதுரை மாநகராட்சியில் கவுன்சிலராக வேண்டும் என்ற கனவோடு சுற்றி வரும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பலரும் சுயேச்சையாக களமிறங்க ஆயத்தமாகிவிட்டார்களாம்.
இப்ப இல்லைன்னா எப்போ என்கிற கேள்வியோடு அவர்கள் தேர்தல் களத்தில் குதிக்கவிருக்கும் நிலையில், மு.க.அழகிரி தரப்பில் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
4 வயது சிறுவனை கொலை செய்து.. பீரோவில் அடைத்து வைத்த கொடூர பெண்.. அப்படியே அரண்டு போன மக்கள்!
இதன் மூலம் மாநகராட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஆதரவாளர்கள் சுயேச்சையாக களமிறங்கினால், அதற்கு அழகிரி அணை போடமாட்டார் எனத் தெரியவருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் எனக் கூறப்படும் நிலையில், அது தொடர்பான பரபரப்பு அரசியல்வாதிகளை பற்றிக் கொண்டது. அந்த வகையில் மதுரை மாநகராட்சியில் சுயேச்சையாக போட்டியிடும் எண்ணத்துடன் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் அவரிடம் கருத்து அறிய விரும்பியிருக்கிறார்கள். யாரையும் தடுக்க விரும்பாத அழகிரி, அவரவர் மனதில் தோன்றுவதை செய்துகொள்ளட்டும் என பட்டும்படாமலும் ஒதுங்கிக் கொண்டாராம்.
மீண்டும் நச்சரிப்பு
அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு இதுநாள் வரை முழு ஓய்வில் இருந்து வந்த அழகிரியை, இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருவதால் அவருடைய ஆதரவாளர்கள் மீண்டும் நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் மதுரை சத்யசாய் நகரில் உள்ள மு.க.அழகிரியின் இல்லம் மெல்ல பரபரப்பு அடையத் தொடங்கியிருக்கிறது. தேன்மொழி கோபிநாதன், பி.எம்.மன்னன் என மு.க.அழகிரியால் மேயர் மற்றும் துணை மேயராக்கப்பட்டவர்கள் இன்னும் அவருடனேயே பயணித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் சந்திப்பு
இதனிடையே ஒன்றரை மாதத்திற்கு முன்பாக கன்னியாகுமரியில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மதுரை முன்னாள் துணை மேயரும், அழகிரியின் நிழல் என வர்ணிக்கப்படுபவருமான பி.எம்.மன்னன் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. அந்தச் சந்திப்பிற்கு பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதேபோல் கோவையில் மு.க.தமிழரசு மாமியார் வீட்டில் அழகிரியும், ஸ்டாலினும் சந்தித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடைபெறவில்லை.
5 மண்டலங்கள்
மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய என 5 மண்டலங்கள் இருக்கின்றன. இதேபோல் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6 சட்டமன்றத் தொகுதிகளும் வருகின்றன. இதனால் மாநகராட்சித் தேர்தலில் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.வும் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் போட்டிடும் வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.